Friday, February 27, 2009

இந்தியா இஸ்லாமிய நாடா?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பு அமைப்புகளான விஷ்வ இந்து பரிசத் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்பினர் தர்ம ரக்ஷ மன்ச் என்ற பெயரில் கூட்டமைப்பு ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்திய நாடு இஸ்லாமியர்களின் நாடல்ல, இந்தியா இஸ்லாத்திற்கு எதிரான நாடு மல்ல, இந்தியா சமாதானத்திற்கான நாடு என முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பத்வா வெளியிட வேண்டுமென அந்த இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


1924ம் ஆண்டிலேயே வெள்ளையர் ஆட்சியின்போதே முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இந்தியா சமாதானத்திற்கான நாடு என்பதை வலியுறுத்தி பத்வா கொடுத்துள்ளனர்.


இந்த உலகம் மூன்று பிரிவாக உள்ளது. ஒன்று தாருல் இஸ்லாம். அதாவது இஸ்லாமிய நாடு.


இன்னொன்று தாருல் ஹர்பு. இஸ்லாத்திற்கு எதிரான நாடு.
மூன்றாவது தாருல் அமான். நடுநிலையான சமாதானமான நாடு. இந்த நாட்டில் இருக்கக் கூடியவர்கள் வேதங்களை பின் பற்றுகின்றவர்கள்.


1924-ல் மார்க்கத் தீர்ப்பளித்த இஸ்லாமிய அறிஞர்கள் இந்தியாவை தாருல் அமான் - சமாதானமான நாடு என்று மார்க்க தீர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவர்கள் புதிதாக ஃபத்வா கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்திய தேச பற்றில் முஸ்லிம் சமுதாயம் எப்பொழுதுமே முன்னணியிலே இருந்து வருகிறது. அது என்றும் தொடரும்.


தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இராமர் கோவிலை கட்டுவோம் என பாரதீய ஜனதா கட்சி செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால் பாபரி மஜ்ஜித் இருந்த இடத்தில்தான் இராமர் கோவில் கட்டுவோம் என்பதை முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல இந்தியாவில் அனைத்து சமுதாய மும் ஏற்றுக்கொள்ளாது.


பள்ளிவாசல் திருமண பதிவை ஏற்க வேண்டும்
திருமணங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவல கங்களில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என அண்மையில் உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.


முஸ்லிம்களை பொறுத்தவரை ஒவ்வொரு திருமணமும் பள்ளிவாசல் திருமண பதிவேட்டில் முறைப்படி சாட்சியங்களோடு பதிவு செய்யப்படுகின்றன. இந்த பதிவே போதுமானது. இது பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பதிவிற்கு இணையானது.

ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள இது தொடரப்பட வேண்டும். இவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நல்ல தல்ல.


இந்த திருமணப் பதிவேடுகளுக்கு அத்தாட்சி வழங்குகின்ற அதிகாரம் பெற்றவர்களாக காஜிகள் உள்ளனர்.


தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களுக்கு காஜிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ள மாவட்டங்களுக்கும் காஜிகள் நியமிக்கப்பட வேண்டும்.


இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லால்பேட்டை இணையதளம்

No comments: