Friday, December 08, 2006

TMMK கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும்!!

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.


2006 டிசம்பர் 6 இல் திசை திரும்பிய பாராளுமன்றம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 1992 டிசம்பர் 6 இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு டிசம்பர் 6 களிலும் மேலப்பாளையத்தின் உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெகுண்டெலுந்தனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஐ துக்க நாளாக அறிவித்தனர். கறுப்புக் கொடிகளைக் கட்டி கடைகளை அடைத்து பந்த் நடத்தி பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்தனர். இந்த ஆண்டும் மேலப்பாளையத்தில் கடைகளை அடைத்து பந்த் நடத்தி எதிர்ப்பு காட்டியுள்ளனர். மேலப்பாளையம் போன்று உணர்வுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் இது போன்று நடந்திருக்கலாம். இது அன்றி எந்த அமைப்புகளும் 92க்குப் பிறகு அமைப்பின் சார்பில் எந்த டிசம்பர் 6 ரிலும் பாபரி மஸ்ஜித் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை.

அது கிழட்டு நரிகளின் கூடாரமாக ஆகி விட்டது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில ராணுவத்தின் துப்பாக்கி முன் ஆடையை தூக்கிக் காட்டியும் நெஞ்சை நிமிர்த்துக் காட்டியும் சுடுடா என வீரியத்துடன் கர்ஜித்த சிங்கங்கள் இருந்த முஸ்லிம் லீக் இருந்தது. 92இல் அது கிழட்டு சிங்கங்களின் கூடாரமாகக் கூட இருக்கவில்லை. கிழட்டு சிங்கங்களின் கூடாரமாக ஆகியிருந்தால் கூட அது சிங்கங்களின் கூடாரம் என்ற வீரியத்துடன் எதிரிகள் அச்சப்படும் வண்ணம் கர்ஜித்திருப்பர். ஆனால் அது கிழட்டு குள்ள நரிகளின் கூடாரமாக ஆகி இருந்தது. எனவே சடங்கு சம்பிரதாயத்துக்காக 92இல் மட்டும் அறிக்கை விட்டனர்.

எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது.

அதனால் 92க்குப் பிறகு பாபரி மஸ்ஜித் விஷயத்தில் முஸ்லிம் லீக் மய்யத் லீக்கானது. எனவே டிசம்பர் 6இல் கூட பாபரி மஸ்ஜித் பற்றி சட்டமன்றம் பாராளுமன்றம் உட்பட நாட்டில் எங்குமே பேச நாதி இல்லை என்ற நிலை ஆனது. அல்லாஹ்வின் அருளால் 1995இல் வீறு கொண்டெழுந்தவர்களால் புணர் நிர்மானம் செய்யப்பட்ட த.மு.மு.க. உருவானது. த.மு.மு.க. தான் முதன் முதலில் அமைப்பு சார்பான எதிர்ப்பைக் காட்டியது. பாபரி மஸ்ஜித்துக்காக தமிழகத்தில் த.மு.மு.க. குரல் எழுப்பிய பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6களில் சட்ட மன்றம் பாராளுமன்றம் என எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது. சட்ட மன்றத்தில் தேசிய லீக் லத்தீப் ஸாஹிபும் பாராளுமன்றத்தில் பனாத்வாலாவும் குரல் கொடுத்தனர்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி.

1996இல் இருந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து லோக்சபாவையும் ராஜ்யசபாவையும் ஒத்தி வைக்குமாறு இடதுசாரி கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இதை 7 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து செய்து வந்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமளி என்ற செய்தி ஊடகங்களில் கண்டு வந்தோம். அப்பொழுதெல்லாம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட தமிழ்நாட்டிலிருந்து பாராளு மன்றத்துக்கு சென்றிருக்கவில்லை.

2004இல் எதுவும் நடக்கவில்லை.

15ஆண்டுகளுக்கு (1989க்குப) பிறகு 2004இல் மு.லீக் தலைவரான காதர் மைதீன் என்பவர் உட்பட 2முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குச் சென்றனர். உணர்வுள்ள முஸ்லிம்களின் அமைப்பான த.மு.மு.க.வின் பேராதரவில் வென்ற முஸ்லிம் எம்.பி.க்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து விட்டனர். இனி அவர்கள் கர்ஜிப்பார்கள் என்று இடதுசாரிகள் எண்ணினார்களோ என்னவோ? 2004இல் இடதுசாரிகள் எதுவும் பேசவில்லை. காதர் மைதீனோ கிதர்(எங்கே) மைதீன் (என்று) ஆகி விட்டார். எனவே இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் எதுவும் நடக்கவில்லை.

பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.

இருந்தாலும் டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்திய பேரணி. த.மு.மு.க. தலைவர்கள் பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்து பாபரி மஸ்ஜித்தைக் கட்டித் தரக் கோரினார்கள். தமிழக எம்.பி.க்களில் முஸ்லிம் அல்லாத எம்.பி.க்களும் த.மு.மு.க. தலைமையின் கீழ் டெல்லியில் அணிவகுத்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் மக்களவையிலும் மாநிலங்களவையிலும்; அமளி நடைபெறாதது சமுதாயத்துக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்ததில்லை. த.மு.மு.க.வின் டெல்லி பேரணி மக்களவை மாநிலங்களவை அமளிகளை விட பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.

சமுதாயம் அமைதி பெற்றது.

2005லும் த.மு.மு.க. டெல்லி செல்லும் என்று சமுதாயம் எதிர் பார்த்தது. த.மு.மு.க. அறிவிக்கும் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பலர் குளிர் ஆடைகளையும் வாங்கி தயாராக வைத்திருந்தனர். சில தூர நோக்கத்துடன் மீண்டும் டெல்லி சென்று போராடும் திட்டத்தை த.மு.மு.க. தவிர்த்தது. 2005லும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் நடந்த போராட்டங்களை மட்டும் கண்டு சமுதாயம் அமைதி பெற்றது.

இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.

2001-2006 வரையிலான சட்ட சபையில் மு.லீக் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் இருக்கவில்லை. இப்பொழுது இருக்கிறார்கள் தேசிய லீக் லத்தீப்புக்குப் பிறகு மு.லீக்கர்கள் பாபரி மஸ்ஜிதுக்காக டிசம்பர் 6இல் சட்ட மன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று பலர் நம்பி இருந்தனர். (நாம் நம்பவில்லை என்பது தனி விஷயம்.) மக்கள் எதிர் பார்த்தபடி தமிழக சட்ட மன்றம் அமளியானது. ஆனால் அது அ.தி.மு.க.வினர் கொண்டு வந்த இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.

நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.

2006 டிசம்பர் 6 மதியம் தொலைக் காட்சிகளில் மக்களவை மாநிலங்களவை அமளி காட்சிகளைக் காட்டினார்கள். ஆ பாராளு மன்றத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலிக்கிறது என்று மகிழ்ந்தார்கள். தலைப்புச் செய்தியிலும் ஷஷபாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி மக்களவை மாநிலங்களவைகளில் அமளி என்றுதான் சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் எதிர்ப்பு காட்டி விட்டார்கள் என்றே நம்பி மகிழ்ந்தது நம் சமுதாயம். விரிவான செய்தியைக் கேட்டதும் நம் சமுதாயத்தவர் மனங்கள் இடிந்து விட்டன. வழக்கம் போல் நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.

இக்கதி ஏற்பட்டிருக்குமா?

7 ஆண்டுகளாக தொடர்ந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து அமளி நடந்த பாராளுமன்றம் திசை திரும்பி விட்டது. பாபரி மஸ்ஜிதை கட்டித் தர வேண்டும் என்ற குரல் ஒலிக்க வேண்டிய பாராளு மன்றத்தில் பள்ளி இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற குரல் ஒலித்து திசை திரும்பியுள்ளது. உயிரை பணயம் வைத்து உழைக்கும் த.மு.மு.க. தொண்டர்கள் உழைப்பின் மூலம் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் யார் யாரையோ அனுப்பி விட்டதால்தான் இக்கதி. த.மு.மு.க. சார்பிலான உண்மையான முஸ்லிம்கள் உணர்வுள்ள முஸ்லிம்கள் சுய சின்னத்தில் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் சென்றிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்குமா?

பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.

எனவே சட்ட மன்றம் பாராளு மன்றம் உட்பட ஆட்சித் துறை அனைத்துக்கும் த.மு.மு.க.வினர் செல்ல வேண்டும். தேர்தலில் த.மு.மு.க. போட்டியிட வேண்டும். இது 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்ட பத்வாவின் தாக்கத்திலிருந்து த.மு.மு.க. விடுபட வேண்டும். தேர்தலில் களப் பணி ஆற்றினால் ஈமான் போய் விடும் என்று 2004இல் பத்வா கொடுத்தவர்தான் பி.ஜெ. அது பிராடுத்தனமான பத்வா என்பதை த.மு.மு.க. 2004இல் களப்பணி ஆற்றி நிரூபித்தது. பிறகு களப் பணி பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே 2005இல் தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.

அது போல் தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க அறிவித்து விட்டால். அடுத்து பி.ஜெ.யும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அவரே தேர்தலில் நின்று விடுவார். 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க. விரைந்து எடுத்தாக வேண்டும் என்பதே. இந்த முடிவை எடுப்பதில் கால தாமதம் செய்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். சட்ட ரீதியாக போராட த.மு.மு.க. வந்த பின்தான் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுபவர்கள் ஒதுங்கினார்கள். இதை த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றுமுள்ள தலைமைப் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

3 comments:

அருளடியான் said...

த.மு.மு.க தேர்தல்களில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்ற தங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். த.மு.மு.க தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் தொடர்ந்து உறுதியாக இருந்தால், தமிழ்நாடு முஸ்லிம் கட்சி என்ற பெயரில் த.மு.மு.கவே தனியாக ஒரு கட்சியைத் தொடங்கி தனி அமைப்பாக செயல்படச் செய்யலாம். பி.ஜெயின் கிண்டலுக்குப் பயந்து தேர்தலில் போட்டியிடாத அவர்களது முடிவு மிகவும் கண்டிக்கத் தக்கது.

வளர்ப்பு மகனின் விவாக் விலக்கு செய்யப்பட்ட துணைவியை முஹமது நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள விரும்பினார். ஆனால் அக்கால மக்களின் விமர்சனத்துக்கு அஞ்சினார்.
எல்லாம் வல்ல இறைவன் தன் நபி முஹமது (ஸல்) அவர்க்ளுக்கு மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சாமல் படைத்த இறைவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் என வழிகாட்டினான். இந்நிகழ்ச்சியில் இருந்து த.மு.மு.க படிப்பினை பெற வேண்டும்.

muslimeen said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ராஹீம்

மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டங்களை நம்புவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.த.மு.மு.க சட்டரீதியாக போராடியதால் பாபர்மஸ்ஜித் மீட்கப்பட்டுவிட்டதா?அல்லது அவசரக்கோலத்தில் சரியான வழிக்காட்டுதல் இல்லாமல் சில இளைஞர்கள் செயல்ப்பட்டதால் சமுதாயம் பாதுகாப்பான நிலையை எட்டியதா?இஸ்லாத்தை சரியான வழியில் புரிந்து செயல்ப்பட்டாலொழிய லட்சியங்களை அடையமுடியாது.

முத்துப்பேட்டை said...

ஆண்டுகள் பல ஆயினும் தளரமாட்டோம்
அன்சாரி

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 போராட்டம் நடத்துகிறீர்கள். இதனால் என்ன பலன்? வருடந்தோறும் சடங்கு நடத்துவதுபோல் இருக்கிறதே? என சிலர் பேசி வருவதாக செய்திகள் வருகின்றன. அவர்களுக்கெல்லாம் ஒரு விஷயத்தை தெளிவாக விளக்க கடமைப்பட்டுள்ளோம். பாபரி மஸ்ஜித் பிரச்சினை 19ஆம் நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது. 1925ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் ஃபாசிச இயக்கம் உருவாக்கப்பட்டபோது அவர்களின் திட்டங்களில் இதுவும் ஒன்று.

எதிரிகள், 1934ல் மிகப்பெரிய மதக்கலவரத்தையே அயோத்தியில் நடத்தினார்கள், பல முஸ்லிம்கள் இறந்தார்கள். பாரசீக கல்வெட்டு பெயர்த்து எரியப்பட்டது. 1948ல் அத்துமீறி நுழைந்து பாபரி பள்ளியில் திருட்டு சிலையை வைத்தார்கள். பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்காக சளைக்காமல் தொடர் முயற்சி செய்தார்கள்.

1983 மற்றும் 1984ல் மீண்டும் விசுவ ஹிந்து பரிஷத் பிரச்சார போரை தொடங்கியது. 1984 செப்டம்பர் 25ல் வி.எச்.பி. கும்பல் பீஹாரிலிருந்து ரதயாத்திரை தொடங்கி அக்டோபர் 6ஆம் தேதி அயோத்திக்கு வந்தடைந்தார்கள். அப்போதும் பாபர் மஸ்ஜித் காப்பாற்றப்பட்டது.

1989ல் நவம்பர் 10 அன்று அடிக்கல் நாட்டு விழா என்ற பெயரில் பள்ளியை இடிக்க முயன்றார்கள். முடியவில்லை. 1990 அக்டோபர் 30ல் மீண்டும் பாபர் மஸ்ஜிதை இடிக்க கும்பலோடு வந்தார்கள். அப்போதைய முலாயம்சிங்கின் ஜனதா தள அரசு துப்பாக்கிச் சூடு நடத்தி காவி பயங்கரவாதிகளை சுட்டுத்தள்ளி பள்ளியைக் காப்பாற்றியது. இறுதியாக உ.பி.யில் பாஜக அரசு ஆட்சியில் இருந்தபோது 1992 டிசம்பர் 6ல் பாபர் மஸ்ஜிதை ஃபாசிச கும்பல் இடித்து தரைமட்டமாக்கியது.

ஆக, பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு எதிரிகள் எவ்வளவு ஆண்டுகள் முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதையும் அதற்காக சளைக்காமல் போராடினார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவர்களது கொடிய லட்சியத்தை அடைய 19ஆம் நூற்றாண்டிலிருந்தே காத்திருந்தார்கள். இது அவர்களது பொறுமையைக் காட்டுகிறது. ஆனால், மஸ்ஜிதை பறிகொடுத்த நாம் ஜனநாயக வழியில் போராடுவதற்கே சளிப்படைவது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் பள்ளி இடிக்கப்பட்டு 14வது வருடத்திலேயே 'இன்னும் எத்தனைக் காலத்திற்குப் போராடுவது?' எனப் பேசுவது வெட்கக்கேடானது.

1948ல் பாலஸ்தீனத்தில் 'பைத்துல் முகத்தஸை' முஸ்லிம்கள் இஸ்ரேலிடம் பறி கொடுத்தார்கள். 58 வருடங்களாக சளைக்காமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் போராடுகிறார்கள். துப்பாக்கி குண்டுகளுக்கு தினந்தோறும் 'ஷஹீதாகிறார்கள்'. ஆயுதங்களுடன் வரும் இஸ்ரேலிய ராணுவத்தை சாதாரண கற்களைக் கொண்டு எதிர் கொள்கிறார்கள். குண்டுவீச்சுகளாலும் டாங்குகளின் அத்துமீறல்களாலும் உயிர் துறக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேலும் மேலும் வீரியமடைந்து இன்றும் ஆக்ரோஷமாகப் போராடுகிறார்கள்.

அந்தத் தியாகங்களே பாபர் மஸ்ஜித் போராட்டத்தில் நமக்கான பாடப் புத்தகங்கள் என்பதை மறக்கக்கூடாது.

இந்திய விடுதலைப்போர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. திப்பு சுல்தானுக்குப் பிறகு வந்தவர்கள். இன்னும் எத்தனைக் காலம் போராடுவது என்று சலிப்படையவில்லை. இரண்டாம் பகதூர் பாஷாவின் இழப்புக்குப் பின்னால் வந்தவர்களும் அப்படி சலிப்படையவில்லை. 1920ல் அல்லது வேறு ஒரு ஆண்டில் காந்தியடிகள் இப்படி சளைக்க வில்லை. போராட்டம், நூற்றாண்டுகளைத் தாண்டி வெவ்வேறு தலைமைகளின் கீழ் தொடர்ந்தது. இறுதியாக அது வெற்றி பெற்றது. இப்படித்தான் போராட்டங்கள் வரலாறுகளில் நீடித்துள்ளன.

இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் நாம் போராட்டத்தில் சளைக்கக் கூடாது. இன்று நாம் போராடுகிறோம். நாளை நமது பிள்ளைகளும் போராடலாம். நமது பேரப் பிள்ளைகளும் போராடலாம். ஆனால் போராட்டத்தை நிறுத்தக்கூடாது.

காரணம் நாம் மேலோட்டமாகப் போராடுபவர்கள் அல்லர். நாம் லட்சியவாதிகள். போராட்டங்களை மாற்றுவோமே தவிர, போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.

நமது எதிரிகள் பாபர் மஸ்ஜிதுடன் ஓய்ந்து விடவில்லை. காசி, மதுராவில் உள்ள பள்ளிவாசல்கள் உட்பட மூவாயிரம் பள்ளிவாசல்களை இடிப்போம் என காவி எதிரிகள் கூச்சலிடும் நிலையில், மற்ற பள்ளிவாசல்களையும் காப்பதற்காக நாம் நடத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இப்போராட்டத்தைக் கருதலாம். மேலும் பாபர் மஸ்ஜித் போராட்டம் என்பது இந்தியாவின் ஜனநாயகத்தையும், இந்தியாவின் பாரம்பர்ய மனிதநேயத்தையும் காக்கும் சட்டப் போராட்டம்.

எதிரிகள் பள்ளிவாசலை இடிப்பதற்கே எத்தனை ஆண்டுகள் காத்திருந்தார்கள் என்பதை உணர்ந்து கொண்டால், கட்டுவதற்கு நாம் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு கடினமாகப் போராட வேண்டும் என்பதையும் உணர முடியும்.
சகோதரர் முஸ்லிமீனுக்கு இது ஒரு சிறிய அட்வைஸ்
மேற்காணும் விபரங்கள் தமுமுகவின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

http://www.tmmkonline.org/tml/others/109488.htm

அன்புடன்,
இப்னு ஃபாத்திமா