Friday, April 28, 2006

த.த.ஜ.வை கைகழுவிய சகோதரர்கள்

தொடர்கிறது ராஜினாமா... த.த.ஜ.வை கைகழுவிய சகோதரர்கள்...

கொடி தூக்கும் கழகமல்ல, கொள்கை காக்கும் கூடாரம் என்ற சொன்னவர்கள் சட்டமன்றத் தேர்தலில் கொடி தூக்கச் சொன்னவர்களின் சாயம் வெளுத்ததால் மனம் வெறுத்துப் போன த.த.ஜ.வினர் ஆங்காங்கே வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் இயக்கத்திலிருந்து வெளியேறிய அதிராம்பட்டினம் ஜெஹபர் அலியின் கடிதத்தை சென்ற வார இதழில் வெளியிட்டோம். அதனைப் படித்த மனப்புழுக்கத்தில் இருந்த வேறுபல சகோதரர்களும் நமக்கு தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

முதுகுளத்தூர் ராஜா உசேன் (உறுப்பினர் எண்: 37265031), மதுரை அப்துர் ரஹ்மான் (உறுப்பினர் எண்: 35180613) ஆகியோர், தாங்கள் த.த.ஜ. தலைமைக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் நகலை நமக்கு அனுப்பியுள்ளனர்.

முதுகுளத்தூர் கிளைத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ராஜா உசேன் தமது கடிதத்தில்,

''த.த.ஜ. தொடங்கும்போது பீ.ஜே. அவர்கள் 'நமது இயக்கம் தவ்ஹீது பணிகளை மட்டுமே செய்யும்' என்றார். அண்மையில் கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாட்டில் 'நாங்கள் யாருக்கும் விலைபோக மாட்டோம், உங்களைக் காட்டி பணம் வாங்க மாட்டோம்' என்றார். ஆனால் இன்றோ முஸ்லிம்களின் விரோதி யான, முஸ்லிம் மக்களை அழிக்க நினைக்கும் சங்பரிவாரின் பினாமியான ஜெயலலிதா, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத ஆணையத்தை தூசித்தட்டி கொடுத்ததை வாங்கிக் கொண்டு, ஏதோ நமக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிட்டது போல் இன்று அ.இ.அ.தி.மு.க.விற்கு கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறி செயல்படுகிறார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததையே எதிர்த்த இந்த அம்மையார், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் எப்படி இடஒதுக்கீடு அளிப்பார் என்பதை மாநிலத் தலைவர் சிந்தித்து, நம் சமுதாய மக்களின் நன்மை என்னவென்று யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். அ.இ.அ.தி.மு.க.விற்கு நமது அமைப்பு ஆதரவு தெரிவித்ததால் நான் இந்த இயக்கத்திலிருந்து விலகு கின்றேன்.''

இப்படிக்கு ஏ. ராஜா உசேன்(உறுப்பினர் எண்: : 37265031)'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை ஆர். அப்துர் ரஹ்மான் த.த.ஜ. மாநிலத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

''த.த.ஜ. கொடி தூக்கும் கழகமல்ல, கொள்கைக் காக்கும் கூடாரம் என்று கூறிய காரணத்தினால் த.த.ஜ.வில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் கடந்த 21-04-2006 அன்று மதுரையில் வேட்பாளர் அறிமுக விழாவில் பி. ஜெய்னுலாப்தீன் பேசிய வார்த்தைகள் மற்ற இயக்கத்தினரையும் தரக்குறைவாகவும், தி.மு.க. தலைவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு கொடுத்த தவறான கருத்துக்களும் சுயநலப் போக்கோடு அணுகக்கூடியதாக இருந்தது. சிறையில் நம் சகோதரர்கள் படும் துன்பங்கள், சிறுபான்மையினரின் அரசியல் நிலைப்பாடு, 2006
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நிலைப்பாடு என்ற தலைப்பில் உள்ள கையேடு ஒன்றை உங்களிடம் கொடுத்தேன். அதைப் பொருட்படுத்தவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகச் செயல்கள், கொடுத்த வாக்குறு தியை மீறியது போன்றவை அடங்கிய நூலையும் கொடுத்தேன். ஆனாலும் சுயநலப்போக்கோடு நடந்து கொண்டிருக்கும் த.த.ஜ. அமைப்போடு சேர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லாத காரணத்தினால் இன்றோடு த.த.ஜ. அமைப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறேன். ஆர். அப்துர் ரஹ்மான், மதுரை (உறுப்பினர் எண்: : 35180613 )''

No comments: