Thursday, February 18, 2016

மாணவ தலைவர் கண்ணைய குமார் என்ன பேசினார் ?

 
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ தலைவர் கண்ணைய குமார் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்த மோதல்களும் இந்தியா முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
பலரும், கண்ணைய குமாரின் பேச்சு குறித்து தங்களது கருத்துக்களை சமுக இணைய தளங்களில் தெரிவித்துவருகிறார்கள். ஆனால் பெரும்பாலோருக்கு, கண்ணைய குமார் என்ன பேசினார் என்பது தெரியாது.
சரி, அவர் என்னதான் பேசினார்?
இதோ… அவர் பேசியதன் தமிழாக்கம்:
“எங்களுக்கு தேசபக்தி குறித்து ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை. . 80 சதவிகிதத்துக்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகளின் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும்.
எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த தேசத்தின் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங் பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ, அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளவே மாட்டோம்.
ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப்படும் சாசனத்தின் மீது எங்களுக்கு சிறு துளி அளவும் நம்பிக்கை கிடையாது. எங்களுக்கு மனு ஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை. இந்த தேசத்தில் நிலவும் சாதியவாதத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை.
அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். அவர்தான் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்கிறார், அவர்தான் கருத்துரிமை பற்றிப் பேசுகிறார்.
நாங்களும் எங்கள் அரசியல் சாசன உரிமைகளை எந்த ஒரு காரணத்துக்காகவும் விட்டு கொடுக்கவே மாட்டோம்.
“ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜிஹாதிக்கள் இருக்கிறார்கள், வன்முறையை பரப்புகிறார்கள்” என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார். தைரியம் இருந்தால் ஆர்.எஸ் எஸ் அடிவருடிகளை அழையுங்கள். நாங்கள் சவால் விட்டு கேட்கிறோம். ஏபிவிபி தங்களது முழக்கங்களில் “ரத்தத்தால் திலகமிடுவோம்” என்றும், “குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்றும் கூறுகிறார்களே..
இந்த வெட்கங்கெட்டவர்கள் யாருடைய ரத்தத்தை இந்த ஊரில் ஓட விடப் பார்க்கிறார்கள்?
ஆம், நீங்கள் குண்டுகளை வீசியிருக்கிறீர்கள்… . ஆங்கிலேயர்களோடு சேர்ந்துகொண்டு, இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் மீது குண்டுகளை வீசியிருக்கிறீர்கள். .
இந்த ஊரில் ஏழைகள் தங்கள் பசியைக் குறித்து கவலை கொள்கிறார்கள். பட்டினியில் வாடும் மக்கள் தங்கள் உரிமையைப் பற்றி பேசுகிறார்கள். நீங்கள் அவர்கள் மேல்தான் உங்கள் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள். இஸ்லாமியர்கள் மீதும் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள். பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடினால், பெண்கள் சீதையைப் போல இருக்க வேண்டும் என்று அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறீர்கள்.
இந்த நாடு ஜனநாயக நாடுதானே? மாணவர்கள், ஊழியர்கள், ஏழைகள், கூலித்தொழிலாளி மற்றும் விவசாயிகள் ஆனாலும், அம்பானி அல்லது அதானி ஆனாலும் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை ஜனநாயகம் வழங்கியிருக்கிறதே? பெண்களின் உரிமைகள் குறித்து பேசும் போது, நாங்கள் பாரதிய பண்பாட்டை அழிக்க நினைப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். .
ஆம், நாங்கள் சிலவற்றை அழிக்கத்தான் நினைக்கிறோம். சுரண்டல் பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம். சாதிய பண்பாட்டை அழிக்க நினைக்கிறோம். மனுவாத, பார்ப்பனிய பண்பாட்டை அழிக்க ஆசைப்படுகிறோம்.
இந்த காவி பரிவாரங்கள் உண்மையில் எங்கே பிரச்சனைகளை உருவாக்க ஆரம்பிக்கிறார்கள்? மக்கள் ஜனநாயகத்தை குறித்து பேசும் போதும், செவ்வணக்கத்தோடு, நீல வணக்கத்தை இணைத்து சொல்லும் போதும், மார்க்ஸோடு, அண்ணல் அம்பேத்கரின் பெயரை இணைக்கும் போதும், காவிகள் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.
இந்த காவிக் கும்பல் ஆங்கிலேயர்களின் அடிவருடிகள். ஆர்.எஸ்.எஸின் வரலாறு என்பதே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு பிணைந்திருக்கிறது. இந்த தேசத்துரோகிகள் தான் நம்மிடம் தேசபக்திக்கான சான்றிதழைக் கோருகிறார்கள்.
வேண்டுமென்றால், எனது மொபைலை பரிசோதித்துக் கொள்ளுங்கள் தோழர்களே, என் தாய், சகோதரிகளை பற்றி அசிங்கமான சொற்களில் திட்டி தீர்க்கிறார்கள். பாரத மாதாவை பற்றி பேசுகிறது இந்த கும்பல்.
நான் சொல்கிறேன்… .உங்கள் பாரத மாதாவில் எனது தாய் இல்லை என்றால், பாரத மாதா மீதே எனக்கு உடன்பாடு இல்லை.
என் தாயார் அங்கன்வாடியில் 3000 ரூபாய்க்கு கூலி வேலை செய்கிறார். அந்த வருமானத்தில்தான் எங்கள் குடும்பம் நடக்கிறது. இந்த கும்பல் அவருக்கு எதிராக கெட்ட வார்த்தையில் ஏசுகிறது.
இந்த நாட்டின் ஏழை, தலித், விவசாயிகளின் தாய்மார்கள் யாரையும் இவர்கள் பாரதமாதாவாக ஏற்றுக் கொள்வதில்லை. உங்களுக்கு துணிவிருந்தால் புரட்சி வெல்லட்டும் என்றோ, பகத்சிங் புகழ் ஓங்குக என்றோ, சுகதேவின் புகழ் ஓங்குக, அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்றோ கூற முடியுமா? அப்பொழுது நம்புகிறோம், காவிக் கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று.
ஆனால், அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் கொண்டாடுவதாக நாடகம் ஆடுகிறது காவி கும்பல்.
சாதியம் தான் இந்த நாடு சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார்.. !
உண்மையாக அக்கறை இருக்குமானால், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்களேன்!
அப்பொழுது நம்புகிறோம், காவிக் கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று.
பல்கலைக்கழக வளாகம் இருப்பதே எதற்காக? சமூகத்தில் நிலவும் சூழலை குறுக்கு விசாரணை செய்வதற்குதானே…?
பல்கலைக்கழகங்கள் இந்த பணியில் தோற்றால், நாடு, நாடாகவே இருக்காது.
இந்த தேசத்தோடு நாங்கள் ஒன்றிப்போனவர்கள். , அம்பேத்கரும், பகத் சிங்கும் இந்நாட்டின் நலனுக்காக கண்ட கனவுகளோடும் நாங்கள் ஒன்றிப் போனவர்கள்.
உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திலும் சமத்துவத்தை உறுதி செய்வதுதான் எங்கள் லட்சிய கனவு. இந்த கனவுக்காகத்தான் ரோஹித் தன்னுடைய உயிரை கொடுத்தான்.
மத்திய அரசுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். ஐதரபாத்தில் ரோஹித்துக்கு என்ன நடந்தந்தோ, அதை கண்டிப்பாக ஜே.என்.யூவில் (நேரு பல்கலை) நடக்க விட மாட்டோம்.”
Thanks : Patrikai.com

No comments: