Sunday, September 19, 2010

சென்னையில் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

சென்னை : சென்னையில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் - துபாய் ) அமைப்பின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஈமான் கல்வி உதவித் தொகை மூலம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு மற்றும் மாணவர் கலந்தாய்வு நிகழ்ச்சி சென்னை எக்மோர் ஹோட்டல் மரினா டவர், கம்பர்ட் இன்னில் 18.09.2010 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.


கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். மாணவி ஷாபிரா பர்வின் இறைவசனங்களை ஓதினார்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அவர்கள் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பின் மூலம் இத்தகைய கல்வி உதவித்தொகையானது அமீரகத்தில் பணி செய்து கொண்டே ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் முயற்சியினால் கல்வி உதவி நிதி திரட்டப்படுகிறது. இதன் மூலம் இத்தகைய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக துஆச் செய்திட கேட்டுக் கொண்டார்.

ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ.முஹம்மது தாஹா அவர்கள் வரவேற்புரை மற்றும் ஈமான் அமைப்பு குறித்த அறிமுகவுரையினை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு இத்தகைய கல்வி உதவி நிதி வழங்குவதற்கு பின்புலமாக இருக்கக்கூடிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், ஈமான் அமைப்பின் கல்விக் குழுத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா உள்ளிட்ட ஈமான் அமைப்பின் அனைத்து நிர்வாகிகளின் பணிகளை நினைவு கூர்ந்தார்.

ஈமான் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலதிபர் கீழக்கரை அல்ஹாஜ் எம்.கே.எஸ். அன்வர் முஹைதீன் மற்றும் காயல் இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்த மாணாக்கர்களை கலந்தாய்வு செய்தனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரான வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் கல்வி விழிப்புணர்வு குறித்தும், ஈமான் கல்வி உதவித்தொகை மூலம் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் வசதியற்ற மாணவர்களை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில ஆலிம் அணி அமைப்பாளர் மவ்லவி எச். ஹாமித் பக்ரீ மன்பஈ அவர்கள் தனது துபாய் பயணத்தின் போது ஈமான் அமைப்பின் சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும், ஈமான் அமைப்பின் பணிகள் குறித்தும் பாராட்டினார்.

ஈமான் அமைப்பின் கல்வி உதவி மூலம் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை ஈமான் நிர்வாகிகள் வழங்கினர்.

சென்னை பீஸ் அமைப்பின் சலாஹுத்தீன், லால்பேட்டை இமாம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஈமான் அமைப்பின் கல்விச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா ( 89031050401 ) நிகழ்வினை தொகுத்து வழங்கி நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முஹம்மது முஸ்லிம், ஆடிட்டர் ஜாஹிர் உசேன், இஸ்மாயில் ஹாஜியார், பைசல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

120 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஈமான் அமைப்பில் கல்விச்சேவையினைப் பாராட்டினர்.

No comments: