Sunday, April 05, 2009

முஸ்லிம் கட்சிகள் - தன் மதிப்பீடு

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - முஸ்லிம் லீக், வேலூர் மக்களவைத் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதை நாம் வரவேற்க வேண்டும். முஸ்லிம் லீக்கில் அடித்தட்டு முஸ்லிம்களின் பங்கேற்பு குறைவு என்பதும், அக்கட்சியின் முக்கிய முடிவுகளை தென் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்களே எடுக்கிறார்கள் என்பதும் அக்கட்சி திருத்திக் கொள்ள வேண்டிய பண்புகள். மனித நேய மக்கள் கட்சியும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் வேலூரில் தங்கள் வேட்பாளரை நிறுத்தக் கூடாது. முஸ்லிம் லீக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

2. இந்திய தேசிய மக்கள் கட்சி - இக்கட்சியைத் தொடங்கியவர்கள் த.மு.மு.கவினர் அரசியல் கட்சியைத் தொடங்கினால், அக்கட்சியை தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அதனாலேயே தாங்கள் கட்சி தொடங்குவதாகவும் சொன்னார்கள். ஆனால், த.மு.மு.க எதிர்ப்பையே தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக வைத்துக் கொண்டுள்ளார்கள். திருக்குர்ஆர் விரிவுரையாளர் காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி போன்ற மார்க்க அறிஞர்கள் இக்கட்சியில் இருந்தும் இந்த நிலையா என்று நம்பவே முடியவில்லை. இக்கட்சியின் தலைவர் குத்புதீன் ஐபக் பழிவாங்கும் உணர்ச்சியில் கலைஞரையும், ஜெயலலிதாவையும் விஞ்சி விடுவார் போலிருக்கிறது. தமிழக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வரும் பல முஸ்லிம்களுக்கே இக்கட்சியப் பற்றி எதுவும் தெரியவில்லை.

3. மனித நேய மக்கள் கட்சி - இக்கட்சியைத் தொடங்கியவர்கள் இக்கட்சிக்கு தலைவர் இல்லை. இறைவன் தான் தலைவன் என்று சொன்னார்கள். நம் இறுதித் தூதர் தான் தலைவர் என்று சொல்லியிருக்க வேண்டும். கட்சி தொடங்கியவுடனே பொறுப்பேற்பவர் பொதுச் செயலாளராய் இருக்க முடியாது. அமைப்புச் செயலாளராக அல்லது அமைப்புக் குழுச் செயலாளராகத் தான் இருக்க முடியும். தமிழகம் முழுவதும் கட்சிக்கு கிளைகள் அமைத்து, அந்தக் கிளைகளுக்கு தேர்தலும், பின்னர் மாவட்டக் கிளைகளுக்குத் தேர்தலும் நடத்த வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுபவர்களால் தேர்ந்தெடுக்கப் படுபவரே பொதுச் செயலாளராக இருக்க முடியும். இவர்கள் தி.மு.க கூட்டணியில் மூன்று இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டது சரியா என்பதை நாம் யோசிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரே இல்லாத ஒரு கட்சி மாநிலங்களவை உறுப்பினர் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முஸ்லிம் லீக்கில் இருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளரும், காங்கிரஸில் இருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளரும், இக்கட்சியில் இருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளரும் போட்டியிட்டால் அது 7 விழுக்காடு ஆகிறது. இது முஸ்லிம்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் தான். இந்த பங்கீட்டை மனித நேய மக்கள் கட்சி ஏற்காவிட்டால் அதனை இயக்கவெறி என்பதை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. முஸ்லிம் அல்லாத வலைப்பதிவர்கள் பலரும் மனித நேய மக்கள் கட்சியின் இந்த நியாயமற்ற கோரிக்கையை அம்பலப்படுத்தி எழுதியுள்ளார்கள். நமக்கு படிக்க வெட்கமாக இருக்கிறது. இவர்களுக்கு நியாயம் புரியவில்லை.

பிற கட்சிகள் - தேசிய லீக் பிரிவுகள், தாவுது மியாகான் கட்சி போன்ற பிற முஸ்லிம் கட்சிகளின் செயல்பாடுகள் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

நன்றி : மக்களவை தேர்தல் 2009

குறிப்பு : இந்த கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், ஆட்சி மன்றக்குழு, பிரைன் டிரஸ்ட் கமிட்டி ஆகியவற்றி்ன் உறுப்பினருமான திருக்குர்ஆர் விரிவுரையாளர் காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி அவர்கள் தான் அரசியலை விட்டு விலகி விட்டதாகவும் தனக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லையென்றும் தெறிவித்துள்ளார்கள். இது பற்றி விரைவில் அவரது அறிக்கை இங்கு வெளியிடப்படும்.

No comments: