Tuesday, July 15, 2008

வஞ்சிக்கப்பட்டோரே! அரசியல் வாழ்வுரிமைக்கு அழைக்கிறது IDMK

வஞ்சிக்கப்பட்டோரே! அரசியல் வாழ்வுரிமைக்கு அழைக்கிறது IDMK


என் இனிய சமூகத்தின் இளவல்களே! ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளே!

தாழ்ந்தவர்கள் என்பது உன்னைப் பொறுத்தது. தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. நீ திட்டமிட்டு வஞ்சகத்தின் வளையில் வீழ்த்தப்பட்டு இருக்கிறாய்.

கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடியின் தவப் புதல்வர்களே! வீரம் விளைகின்ற மண்ணுக்கு சொந்தக்காரர்களே! வேகாத பொருளை வெள்ளித் தட்டில் கொடுப்பதைப் போன்று சில சீட்டுக்களை ஒதுக்கியதால் உன் ஓலம் ஓய்ந்து விட வில்லை. செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக 5 தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் அன்று. மாட்டுக்கு உள்ள மரியாதைக் கூட உனக்கு இல்லை.

சில அரசியல் கட்சிகளின் முகவரியும், முகமும் தெரியாத காரணத்தினால் எலி வந்து கருவாட்டை நாடி பொறியில் மாட்டிக் கொள்வதைப் போன்று மாட்டிக் கொண்டு நிற்கிறாய். காயம் தேடும் காக்கைகளின் கொடூர செயல்களில் இருந்து உன்னைக் காத்துக் கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சிகளில் பார்வைக் குருவிகளாக அங்கொன்றும், இங்கொன்றும் காட்சிப் பொருளாய் நிறுத்தப்பட்டு இருக்கிறாய். ஆகையால்தான் சோகங்களை எண்ணிக் கொண்டு கண்ணீரைச் சிந்திக் கொண்டு நிற்கிறாய். தன்னை உணராதவனை மற்றவர்கள் அசைக்கிறார்கள், ஆம், உண்மையில் நீ அசைக்கப்படுகிறாய். அரசியலில் அடிமைப் படுத்தப் படுகிறாய்.

மானுடத்தை மானுடமாய்ப் பார்க்கின்ற மார்க்கத்தை இதயத்தில் இருத்திக் கொண்டதால் மானுடம் எங்கே காயப்படுகிறரோ அங்கே எங்கள் இதயங்கள் சலனப்படுகின்றன. அங்கே உரிமைக்குரல் எழுப்புகின்றன. உன்னை விலை பேசும் எத்தர்களை இனம் கண்டு ஒதுக்கிவிட்டு, ஆம், செத்த மீனைக் கடல் கருவாடு என்று ஒதுக்கிவிடுவது போல் ஒதுக்கி விட்டு அரசியல் உரிமைக்கு வஞ்சிக்கப்பட்ட சமூகங்களை இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) அழைக்கிறது.



இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு

No comments: