Monday, March 17, 2008

புளியங்குடி கொலை வழக்கில் அரசிற்கு தமுமுக கெடு

கடையநல்லூரில் கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம்.



7 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தப்லீக் பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குடி சகோதரர் அப்துல் ரஷீது பள்ளியில் வைத்து வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொல்லப்பட்டார். இதில் புலன் விசாரணை செய்த நெல்லை மாவட்ட காவல்துறை, அப்துல் ரஷீது மகன் மைதீன் பிச்சை அவருடைய நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கருணைத் தொகை ரூ.2,00,000ஃ- திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்த த.மு.மு.க.சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து C.B.C.I.D.S.I.T. பிரிவிற்கு மாற்றப்பட்டது. SIT யின் விசாரணையில் மைதீன் பிச்சை குற்றவாளி இல்லை என நிருபணம் ஆகியுள்ளது.

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்ட கருணைத் தொகையை அவரது குடும்பத்திற்கு கிடைத்திட வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நெல்லை மாவட்ட த.மு.மு.க. 16.03.2008 ஞாயிறு அன்று கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடத்தியது.

இதில் உரையாற்றிய மாநில துணைப் பொதுச் செயலாளர் மௌலவி J.S..ரிபாயி ரஷாதி த.மு.மு.க.அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக எவ்வாறு செயல்படுகிறது என விளக்கிப் பேசினார். இறுதியாக சிறப்புரையாற்றிய மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ், மேற்கூறப்பட்ட இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற அரசிற்கு இரண்டு மாத கால அவகாசம் அளிப்பதாகவும், தவறினால் நெல்லை மாவட்டம் ஸ்தம்பிக்க கூடிய அளவிற்கு போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.


மேலும், அவர் குறிப்பிடுகையில் கடந்த 2004 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அக்கூட்டணியின் வெற்றிக்காக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் த.மு.மு.க.சுழன்று சுழன்று களப்பணி ஆற்றியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்திலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான அறிக்கை அளிப்பதற்காக தேசிய மதம் மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இட ஒதுக்கீடு கமிஷன் அமைத்தது. இந்த ஆணையம் 22.05.2007 அன்று தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கான 15 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து எம்.பிக்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதப்படும் என்றும் குறிப்பிட்;டார்.

மேலும், அவர் பேசுகையில் தமிழகத்தில் தி.மு.க.தலைமையிலான அரசு அறிவித்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக முஸ்லிம்களுக்கு சென்;றடையாமல் உள்ளதை முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இப்பிரச்சினை தீர்வு செய்யப்படும் என்று நம்புவதாக குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் தவிர, இதற்கான சதித் திட்டத்திற்கு பின்னணியாக செயல்பட்ட முக்கிய தலைவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், இராம கோபாலன் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டதோடு, கடையநல்லூரில் ஆர்ப்பாட்;டம் செய்ய முயன்ற மனித நீதி பாசறை அமைப்பினர் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இறுதியாக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மேலப்பாளையம், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் சில அதிகாரிகள் அதைக் கிடைக்க விடாமல் செய்துள்ளனர். பாஸ்போர்ட் பெறுவது என்பது ஒரு இந்திய குடிமகனின் உரிமையாகும். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது சட்ட விரோதம் ஆகும். இந்த நிலை தொடர்நதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.

செய்தி தொகுப்பு : திரு.நெல்லை உஸ்மான்.

No comments: