Tuesday, January 23, 2007

திமுக அரசை எதிர்த்து தமுமுக ஏன் போராட்டம் நடத்துவதில்லை? கூட்டணியில் இருப்பதால் சமரசமா?
! போராட்டம் எப்போது நடத்த வேண்டும்? ஏன் நடத்த வேண்டும்? என்பதற்கு சில வரைமுறைகள் உண்டு. நியாயம் கிடைக்காத போதும், அதற்கான முயற்சிகள் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் போதும் போராட்டம் நடத்த வேண்டும். இதுதான் பொது நியதி. இந்த அடிப்படையில்தான் தமுமுக போராட்டங்களை நடத்தி வருகிறது.
புதிதாக அமைந்த திமுக ஆட்சியில் பல கோரிக்கைகளை தொலைபேசி வேண்டுகோளிலேயே தமுமுக முடித்து விடுகிறது. எனவே போராட்டங்கள் தேவையில்லாமல் போகிறது.

அதையும் மீறி நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் போது அதற்காக புதிய ஆட்சியை எதிர்த்து தமுமுக போராடியுள்ளது. சளைக்கவும் இல்லை, சமரசமும் செய்யவில்லை.

26-5-2006 அன்று செங்கத்தில் காவல்துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
5-7-2006 அன்று பொதக்குடி திமுகவினரைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியில் மாநிலச் செயலாளர் காஞ்சி அப்துஸ் ஸமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
18-08-2006 அன்று ஊட்டியில் தமிழக அரசின் காவல்துறையைக் கண்டித்து மாநிலச் செயலாளர் கோவை உமர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேற்கண்ட அதே வாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் மாநிலச் செயலாளர் எஸ். முஹம்மது ஜெயினுலாபிதீன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
19-08-2006 அன்று தாம்பரத்தில் திமுக எம்.எல்.ஏ. ராஜாவைக் கண்டித்து மாநிலச் செயலாளர் ஏ. சாதிக் பாஷா தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ஏராளமான தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

22-11-2006 அன்று திமுக பெயரைச் சொல்லி சில ரவுடிகள் தமுமுகவின் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளைத் தாக்கியபோது ரவுடிகளை கைது செய்யக்கோரி மறியல் நடத்தப்பட்டது. இந்த ஆட்சியில்தான் இரண்டு முறை அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் சென்று, அதிகாரிகளின் வேண்டு கோளைப் புறக்கணித்து இரண்டு முறை காவல்துறை தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தமுமுக நினைத்திருந்தால் திமுக ஆட்சிக்கு சங்கடம் தரக்கூடாது என்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியின்போது நடத்தப் பட்டது போல் காவல்துறை அனுமதியுடன் அவர்கள் குறிப்பிடும் இடத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க முடியும். ஆனால் அமெரிக்கத் தூதரகத்தின் அருகிலேயே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது.
18-09-2006 அன்று கோவையில் கூடிய தமுமுக மாநிலச் செயற்கு ழுவில் துணை நகரம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவையெல்லாம் கடந்த
ஆறு மாதத்தில் நடைபெற்றவை.

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விரைவில் விடுதலை செய்யப்படா விட்டால் இந்த ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் தமுமுக தயங்காது என்றும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதிலிருந்து தமுமுகவின் நேர்மையான அணுகுமுறையை சில பொது அறிவில்லாதவர்கள் வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுத்தாலும், மனசாட்சி உள்ளவர்கள் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்வார்கள்.

No comments: