Tuesday, September 23, 2014

498 (a) வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது

கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது, வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, மணிப்பால் கே.எம்.சி., மருத்துவ உதவி பேராசிரியர் டாக்டர் குருகாந்த் ராவுக்கும், டாக்டர் ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15ம் நாள், தாவணகரேயில் உள்ள, தன் பெற்றோர் வீட்டிற்கே போகலாம் என, ரஞ்சிதா, கணவரிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு, ராவ் மறுக்கவே, விவாகரத்து கொடுக்காவிடில், ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்டதாக, பொய் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பின், ரஞ்சிதா, மங்களூரு, 'முல்லர்ஸ்' மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.இதையறிந்த கணவர் ராவ், நேரில் சென்று, தன்னுடன் சேர்ந்து வாழும்படி கேட்ட போது, அதற்கு மறுத்த ரஞ்சிதா, விவாகரத்து கேட்டுள்ளார். அதற்கு ராவ் மறுக்கவே, போலீசில், கணவர் குருகாந்த் ராவ், அவரது தந்தை டாக்டர் ராவ் ஆகியோர், தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கொடுக்காததால், வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் புகார் கொடுத்தார்.

ரஞ்சிதாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும், மகளுக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தனர். டாக்டர் குருகாந்த் ராவ், அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது, ரஞ்சிதா கொடுத்துள்ள புகார் தவறானது; திருமண செலவு அனைத்தையும் குருகாந்த் வீட்டினரே ஏற்று கொண்டதும் தெரியவந்தது. உடல் ரீதியாக ரஞ்சிதாவை யாரும் கொடுமைப்படுத்தவில்லை என்பதும் நிரூபணமானது. இதன் அடிப்படையில், ரஞ்சிதா தாக்கல் செய்த புகார், போலியானது என்பது தெரிந்ததால், போலீசார் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையில், ரஞ்சிதா தொடர்ந்த வழக்கால், தன் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், தன் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதால், அவரை தண்டிக்க வேண்டும் என, மங்களூரு, ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில், குருகாந்த் ராவ் மனு தாக்கல் செய்தார். வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக, விசாரணை நடத்த, ரஞ்சிதாவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில், அவர் பணியாற்றி வந்த முல்லர்ஸ் மருத்துவமனையிலிருந்து அவர் விலகிவிட்டதால், சம்மனை அவரால் பெற முடியவில்லை.பின், நீதிமன்றம், மங்களூரு பார்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டு, ரஞ்சிதாவையும், அவரது பெற்றோரையும் ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து, கைது செய்ய உத்தரவிட்டது.அதன்படி, தாவணகரே சென்ற மங்களூரு போலீசார், ரஞ்சிதாவையும், அவரது பெற்றோரையும் கைது செய்தனர்.

Thanks Dinamalar

No comments: