Tuesday, July 29, 2008

குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசாதீர் - MNP கண்டனம்

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசக்கூடாது உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை இனம் காண வேண்டும் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை

நெல்லை 29, ஜீலை 2008, குஜராத்திலும், பெங்களுருவிலும் நடந்த குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து அதற்கு மதச் சாயம் பூசப்பட்டு தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து காவல்துறை தனது அத்துமீறலை நடத்தி வரும் வேலையில் இதனை கண்டித்து குண்டுவெடிப்புக்களுக்கு மதச் சாயம் பூசாமல் உண்மை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று இன்று நெல்லையில் மனித நீதிப் பாசறை அமைப்பின் சார்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் மாநில பொதுச்செயளாலர் யா.முஹைதீன் தெறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த சில நாட்களாக அஹமதாபாத், பெங்களூர் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நீதிப் பாசறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாகவும் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்தக் குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார சக்திகள் மதச்சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி இவ்வாறு திசை திருப்பும் வேலை தொடர்ந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் என்பது பாமர மக்களுக்கும் புரியும்.

இதில் காவல்துறை நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்.



கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 6ம்நாள் மஹாராஷ்டிர மாநிலம் நந்தித் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த பஜ்ரங்தள தீவிரவாதிகள் வெடித்துச் சிதறியதும், அச்சம்பவத்தில் பல பஜ்ரங்தள தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதும் காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் அங்கு முஸ்லிம்கள் அணிவது போன்று தொப்பிகளும் போலி தாடிகளும் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடந்த மாலிகான் குண்டுவெடிப்பில் போலி தாடியோடு ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 2008, ஜூன் மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கத்காரி ரங்யாத்தன் தியேட்டரில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இச்சம்பவத்தில் இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மேலும் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்திற்கு சில தினங்கள் முன்பாக தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், பஸ் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி பயங்கரவாதிகள், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தவும் இந்துக்களை ஒருங்கிணைக்கவும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு முன்பே பல மாதங்களாக குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவற்றையெல்லாம் காவல்துறை கவனத்தில் கொண்டு தற்போது நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கு முன்பு நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளின் விசாரணையை சரியான கோணத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

இன்று நெல்லையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் யா முஹைதீன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எம்.என்.பி.யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுமுபாரக், மாவட்டச் செயலாளர் மஹபூப் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.


1 comment:

வினவு said...

Please see this article regarding this issue
http://vinavu.wordpress.com/