Wednesday, April 16, 2008

தேர்தலுக்கு முன் வரும் மாநாடுகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. .



யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது பிரபலமான பழமொழி. தேர்தல் வரும் பின்னே, மாநாடுகள் வரும் முன்னே என்பது தற்கால புதுமொழி. போட்டி போட்டுக் கொண்டு பலரும் பல பெயர்களில் மாநாடுகள் நடத்தத் துவங்கி விட்டனர்.

இளைஞர் மாநாடு என்றும், மாநில மாநாடு என்றும், பெண்கள் மாநாடு என்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிபெருக்கிகள் உரத்து ஒலிக்க தேர்தல் திருவிழா துவங்கி விட்டது போல் தான் தோன்றுகிறது.

அரசியல் மாநாடுகள் மட்டுமின்றி, ஆன்மீக மாநாடுகள் கூட ஆதரவு பலத்தைக் காட்டி அரசியல் கட்சிகளிடம் ஆதாய பேரத்தை நடத்துவதற்காக ஆங்காங்கே நடத்தப் போகின்றன. அப்படிப்பட்ட ஒரு மாநாட்டிற்கான அழைப்பைப் பாருங்கள்.

'தங்களின் அரசியல் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும், பலப்படுத்திக் கொள்ளவும் அல்லது அரசியலில் அடியெடுத்து வைக்கவும் மாநாடுகள் நடத்தப் படுகின்றன. ஆனால் இவைகளில் முற்றிலும் மாறுபட்ட இதுவரை சமுதாயமே கண்டிராத வகையில் படைத்த இறைவனையே வணங்க வேண்டும், படைப்புகளை வணங்கக் கூடாது என்ற ஓர் இறை மந்திரம் உலகமெங்கும் பரவுவதற்காக நடத்தப்படுகிறது இந்த மாநாடு' – என்ற முன்னறிவிப்புடனும் ஒரு மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட வாசகத்தை எழுதியிருப்பவர் உலக மகா அயோக்கிய சிகாமணி சாட்சாத் பிஜே தான். இவரிடத்தில் ஒரு பண்பு உள்ளது. அதாவது தான் நாடியுள்ள அயோக்கியத்தனத்தை பிறர் செய்வதாக குற்றம் சுமத்தி மக்கள் முன்னால் தான் ஒரு நியாயவான் போல பறைசாற்றிக் கொண்டு விட்டு, பிறகு மெதுவாக தான் எவற்றையெல்லாம் எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாரோ அவற்றை செயல்படுத்த துவங்கி விடுவார். இவரின் இந்த குணத்தை அறிந்தவர்களுக்கு இந்த அழைப்பின் மூலம் இவர் விடுத்திருக்கும் செய்தி தான் - ததஜ அரசியல் பரிணாமம் எடுக்கப் போகிறது.

நாம் இப்படி எழுதியதும், ஓய்ந்து போய்விட்ட உமரோ, அடங்கிப் போன அஹமது அலியோ அல்லது அவ்வப்போது பிஜேவிற்கு வால் பிடித்து சூடு பட்டுக் கொள்ளும் அதிரை ஃபாரூக்கோ ஆவேசமாக வெளிவரலாம். என்றாலும் கூட நாம் எழுதியுள்ளது வாஸ்தவம் தான் என அவர்களும் கூட உள்ளூர ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

ஏனெனில்,

ஏப்ரல் 2004 இல், இனி தான் நினைத்த படி தமுமுக தலைமையை ஆட்டுவிக்க முடியாது என்ற நிலை வந்ததும், தமுமுகவின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு தமுமுகவிலிருந்து ஓடினாரே.. .. அன்று அவர் கூறியது என்ன தெரியுமா?

பலர் மறந்திருப்பார்கள், பலர் அவ்வாறு கூறியதை நம்பி தமுமுகவிலிருந்து வெளியேறி அவருடன் கைகோர்த்து நின்ற சில நாட்களிலேயே அவரது சிந்தனை, சீர்கேட்டின் பக்கம் செல்வதை உணர்ந்து சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டனர். இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்ள இயலாத சிலரும், தனது சொந்த நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென்ற எண்ணம் கொண்ட சில சுயநலமிகளும் தான் மிஞ்சி இருக்கின்றனர். எனவே தான் மீண்டும் மக்களை திரள வைக்க வேண்டுமென்றால் அன்று சொன்னதையே இன்றும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் தான் தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அரசியல் பரிணாமத்திற்கான அடிக்கல் நாட்ட முயற்சிக்கிறார்.

அன்று தமுமுகவிலிருந்து விலகி ஓடிய போது சொன்ன காரணம், 'தமுமுக – தவ்ஹீது கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது. அதனால் அதிலிருந்து வெளியேறி விட்டேன். இனி தவ்ஹீது கொள்கையை உயர்த்துவதற்காக பணியாற்றப் போகிறேன். தவிர, தமுமுக என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது. எனவே தமுமுக என்ற ஒன்று, அதன் பணிகள் எதுவும் இன்று அவசியமற்றதாகி விட்டது. எனவே அங்கிருப்பவர்கள் உடனடியாக வெளியேறி என் பின்னே அணிவகுக்க வேண்டும்' – என்று மேடைகளிலும், தமுமுக ஆறு மாதங்களில் அழிந்து விடும் எனவே இங்கு வந்து விடுங்கள் என தனி நபர்களிடமும் கதை அளந்து பார்த்தார்.

80 களிலிருந்து அவருடன் இருந்தாலும், அவரது நோக்கத்தை புரிந்து கொள்ளாத சிலர் அவர் கூறிய தவ்ஹீத் எனும் தாரக மந்திரத்தால் மயங்கி அவரின் பின் சென்றனர். எந்த தமுமுகவிற்கான அவசியமோ, அவர்களின் பணியோ இந்த தமிழகத்திற்கு அவசியமற்றதாகி விட்டதாகச் சொன்னாரோ, அதே தமுமுகவை காப்பியடித்து கொடி முதல் கொள்கை வரை பின்பற்ற ஆரம்பித்தார்.

தவ்ஹீத் தான் என் உயிர் மூச்சு, நாங்கள் கொடி தூக்கும் கோமாளிகளல்ல மாறாக இது கொள்கை காக்கும் கூடாரம் என கொக்கரித்தவர்கள் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டதாலோ அல்லது வேறு எந்த நிர்பந்தத்திற்காகவோ அதைப் பற்றி பிறகு மூச்சுக்கூட விட வில்லை. ஆனால் தவ்ஹீத் என்ற பெயரால் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதனை தாமதமாக உணர்ந்து கொண்ட பலர் மவுனமாக ஒதுங்கிக் கொண்டனர்.

அரசின் ஆதரவோடும் அன்று இருந்த அரசியின் ஆசியோடும், அனுசரணையோடும் கும்பமேளா ஒன்றை நடத்த முயற்சித்தார். ஆனால் அந்த கும்பமேளாவை தவ்ஹீதின் பெயரால் நடத்த முற்படவில்லை. தவ்ஹீத்தான் எமது உயிர் மூச்சு என்று சொல்லிக் கொண்டாலும், இஸ்லாமிய எதிரியான செல்வியோடு அரசியல் கூட்டணி காண வேண்டும். அதனால் தவ்ஹீத் என்று சொல்லி அதனால் பொதுமக்கள் (அவரது பாஷையில் குராஃபிகள்) வராமல் போய் விட்டால் பேரம் படியாது என்ற பயத்தினால் தமுமுகவின் முழுமுதற் கோரிக்கையை கையில் எடுத்து இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாடு என்று பெயரிட்டு கும்பமேளாவிற்கு கூட்டத்தை சேர்க்க நாடினார்.

அந்தோ பரிதாபம். அதிலும் தோல்வி தான். தமுமுக இதே ஒதுக்கீடு கோரிக்கைக்காக தஞ்சையில் திரண்ட போது அலை அலையாய் ஆர்ப்பரித்து வந்த தமிழக முஸ்லிம்கள் இவரின் கும்பமேளாவிற்கு குறைந்த அளவிலேயே கூடினர். ஒன்னரை லட்சத்தை தாண்டாத அந்த கூட்டத்தை உருப்பெருக்கி, அதனையும் பல முறை பெருக்கி 10 இலட்சத்திலிருந்து 18 இலட்சம் வரை இஷ்டத்திற்கு எண்ணிக்கையை அறிவித்து இங்கிலாந்து மகாராணியின் ஒட்டியாணத்தை ஏலம் விடுவது போல சமுதாயத்தை ஏலம் விட்டார்.

என்றாலும் அரசியின் முன் அடங்கி ஒடுங்கி ஒரு இலட்சம் பேர் வரை கூடினார்கள் என்று சுருதி குறைந்து ஸ்வரம் வாசித்தார்.

இது 2005 கதை. அன்று சொன்ன அதே கதையை இன்று விட முடியாது. அரசியின் முன்பாக அடங்கி ஒடுங்கி குடுத்த வாக்குமூலம் சம்சுதீன் காஸிமி போன்றோர்களால் சந்திக்கு இழுத்து வரப்பட்டு விட்டது. தவிர அன்று அரசியல் பேரம் பேச இடஒதுக்கீடு கோரிக்கையை முகமூடியாய் பயன்படுத்தியது போல் இன்று படம் காட்ட வழியில்லை. பெயரளவிற்காவது ஒரு அரசு ஆணை வெளியாகி விட்டது. அதற்காக தலைவரை தனியே சந்தித்து அடிமை சாசனமும் எழுதிக் கொடுத்தாகி விட்டது. அதனால் இடஒதுக்கீடு பற்றிப் பேச முடியாது. எனவே தான் மீண்டும் தவ்ஹீத்.

சமுதாயத்தை கூட்டி வந்து அரசியிடம் காண்பித்து பேரம் நடத்தியதில் பெரும் தொகை கைமாறியதாக அன்றே ஒரு பேச்சு அடிபட்டது. அப்படி அரசியிடமிருந்து சேர்ந்த பணத்தை சந்தேஷமா, செலவு பண்ண பக்குவமா – பத்திரப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்ததால் தலைவரை தனியே சந்தித்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தாகி விட்டது.

எனவே வேறு வழியே இல்லை.

தேவையான சமயத்தில் பிஜேபிக்கு இந்துத்துவா கைகொடுப்பது போல, பிஜேவிற்கு கை கொடுப்பது தவ்ஹீது கோஷம் தானே. இதனை கூவியதால் தானே தமுமுகவிலிருந்து ஒரு சிலரையாவது அசைக்க முடிந்தது. இதனை கூவிக் கொண்டிருப்பதால் தானே அப்பாவி தமிழ் முஸ்லிம்களை கொஞ்சமாவது தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, அவர்களின் உழைப்பை உறிஞ்சி கொளுக்க முடிகிறது.

எனவே வேறு வழியே இல்லை. உள்ளூர் மக்களிடம் ஆதரவை எப்படிப் பெறுவது என்பதற்கு கும்பமேளாவில் கிடைத்த அனுபவம் கைகொடுக்கும். இலவச பயண ஏற்பாட்டாலும், உணவு ஏற்பாட்டாலும் ஓரளவுக்கு ஆட்களை திரட்ட இயலும். இதனைச் சொல்லியே ஏமாந்த வெளிநாட்டு ரசிகர்களிடம் ஒரு தொகையை வசூலிக்கவும் இயலும்.

இத்தனைக்கு பிறகும் எதிர்பார்த்த கூட்டம் கூட வில்லையானாலும் கவலையில்லை கும்பமேளாவில் பெற்ற அனுபவம் உள்ளது. ஒரே இடத்திலுள்ளவர்களை வெ வ்வேறு கோணங்களில் எடுத்து மிக பிரம்மாண்டமாக படம் காட்டுவதற்கான கருவிகளும் சாதனங்களும் வசதி வாய்ப்புகளும் வின்டிவியின் தயவில் தயாராக இருக்கவே இருக்கின்றது. எனவே கவலையில்லை.

தவிர, வரப்பையும், வாய்க்காலையும் கும்பகோண தெருக்களையும் நீள அகலத்தால் பெருக்கி மாநாட்டு வருகையாளர்களை கணக்கிடுவதில் பதிய முறையை கடைப்பிடித்து அரசியல்வாதிகளுக்கெல்லாம் அரிச்சுவடி கற்றுக் கொடுத்த வாத்தியார் - தவ்ஹீத் எம்ஜிஆர் - அல்லவா, இந்த பிஜே. இந்த அடிப்படையில் வல்லத்தில் வளைத்துப் போடப்பட்ட நிலத்தின் நீள அகலங்களைப் பெருக்கி லட்சகணக்கில் அல்ல கோடிக்கணக்கில் குழுமியதாக கணக்க காட்டி விடலாம்.

எனவே தான் தவ்ஹீத் பெயரில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அதையும் கூட சற்று கவனித்துப் பார்த்தால், இவர் செய்து வரும் வரலாற்று இருட்டடிப்பு பளிச்சென விளங்கும். அதாவது தமிழக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஏன் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என தொலைக்காட்சிகள ஒவ்வொன்றும் நல்ல நாள் பெருநாளுக்கு அறிவிப்பு செய்வதை கண்டிருக்கிறோம்.

அரசியின் கண்ணசைவில் கைமாறிய தொகையை தொலைக்காட்சியில் முதலீடு செய்து மீண்டும் அதே தொலைக்காட்சியை அதே அரசியிடம் விற்றுப் பெருத்த பணம் பார்த்த அனுபவத்தால் இவரும் அதே டிவி பாணியை கடைப்பிடித்துள்ளார் போலும்.

'முற்றிலும் மாறுபட்ட இதுவரை சமுதாயமே கண்டிராத வகையில் .. .. .. .. ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காக.. .. ..'

வரலாற்றை மாற்றி எழுதுவதிலும், மறைப்பதிலும் சோ, குருமூர்த்தி வகையறாவிற்கு இணையாக பிஜேவும் விளங்குகிறார் என்ற கூற்று உண்மைதான் போலும். 2000 இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு ஏகத்துவ எழுச்சி மாநாடு முன்னர் நடத்தப்பட்டது, அன்று இவருடன் இருந்தவர்களில் பலர், இவரின் வேஷம் விளங்கியதால் இவரை விட்டு விலகிச் சென்று விட்டனர்.

அன்றய மதுரை ஏகத்துவ மாநாட்டில் பிஜே, பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பக்கமே சுற்றித் திரிந்தார் என பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்த லுஹா கூட, மஸ்ஜிதுர் ரஹ்மான் கணக்கு வழக்கிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பின்னர் அமைதியாகி விட்டார்.

அதேபோல், மற்றொரு மேலப்பாளையத்துக்காரர் மாநாட்டு வரவு செலவுகளை கவனித்துக் கொண்டிருந்தவர் மாநாட்டுப் பணிகளில் நடைபெற்ற வீண் விரயங்களை தட்டிக்கேட்ட காரணத்தினாலும், பிஜேவின் நடவடிக்கைகளை ஆட்சேபித்ததாலும், மாநாடு முடிந்தவுடன் பொருளாதார அவதூறு சுமத்தப்பட்டு, மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு அமைப்பிலிருந்தும், இயக்கத்திலிருந்தும் ஓரம்கட்டப்பட்டார்.

இதுதான் ஃபளுலுல் இலாஹி வெளியேற்றப்பட்டதன் பின்னணி.

இவையெல்லாம் இன்றய தளபதிகளின் நினைவிற்க வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மதுரை மாநாடு பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையோ என்னவோ.

பாக்கரின் பஸ் பயண லீலைகள் சம்பந்தமாக, கடலூர் முன்னாள் ததஜ நிர்வாகிகள் பிஜேவை முபாஹலா செய்ய அழைத்த போது ஓடோடிச் சென்று, அங்கு கூடியிருந்தவர்களை ஏன் வல்ல அல்லாஹ்வையே முட்டாளாக்குவது (நவூபில்லாஹ்) போல இவர் அவருக்குச் சொன்னதை அவர் எனக்குச் சொல்ல, அதைத் தான் நான் இவர்களுக்குச் சொன்னேன் எனக் குறிப்பிட்டாரே அது போன்று கூட ஃபளுலுல் இலாஹி விடுக்கும் முபாஹலா சவாலை சந்திக்க முடியாமல் வெருண்டோடிக் கொண்டு இருப்பவர் தான் இந்த தவ்ஹத் வாத்தியார் -எம்ஜிஆர் - பிஜே.

சேலம் கண்ணன் என்பவர் அவரிடம் சொல்லி, அவர் என்னிடம் சொன்னதைத் தான் நான் புகாராக அளித்தேன் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சர்க்காரியா கமிஷன் முன்பு ஆஜராகிச் சொன்னாரே அதேபோல் கடலூர்காரர்களிடம் பிஜே சொன்னதால் மாத்திரம் அவரை நாம் தவ்ஹீது வாத்தியார் என்று குறிப்பிடவில்லை. மாறாக மதுரை மாநாடு விஷயத்தில் லுஹா, இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டும் கூட ஒரிஜினல் வாத்தியார் எம்ஜிஆர் விஷயத்தில் ஒத்துப் போவதால் இவரை தவ்ஹீது வாத்தியார் எனக் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த தவ்ஹீது வாத்தியார் - எம்ஜிஆர் பிஜேவின் அழைப்பில் உள்ள மற்றொரு வாசகம் 'ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காக.. .. ..'

இந்த மாநாடு(?) நடக்க இருப்பது வல்லத்தில். மாநாடு நடைபெற இருப்பது தமிழ் மொழியில் மட்டுமே அப்புறம் எப்படி.. .. .. உலகமெங்கும் பரவுவதற்காக .. .. .. ???

எதையுமே மிகைப்படுத்தி பழக்கப்பட்ட திருவாளர் பிஜே, தவ்ஹீதின் உலகத் தலைமை தனக்கு வழங்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டார் போலும். அதனால் தான் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் தான் நடத்தும் இம்மாநாடு உலகமெங்கும் பரவும் என்று புருடா விட்டுள்ளார். அதாவது, உலகமெங்கும் ஏகத்துவ ஒளி பரவாமல் அந்தகாரம் சூழ்ந்திருப்பது போலவும், இனி இவர் நடத்தப்போகும் மாநாட்டிற்கு பிறகு தான் உலகமெங்கும் ஏகத்துவம் எதிரொலிக்கப் போகிறது போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் உண்மையான தவ்ஹீத் எழுச்சி மாநாடுகள் உலகெங்கும் பரவலாக பல்வேறு பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்டு வருவதை தவ்ஹீதின் பால் நாட்டமுள்ள அனைவரும் அறிவார்கள். சமீபத்தில் கூட உலகெங்கும் இருந்து வருகை தந்த பல அறிஞர்களைக் கொண்டு சென்னையில் பிரம்மாண்டமாக பத்து நாட்கள் பீஸ் (PEACE) மாநாடு நடந்தது. இதில் விசேஷம் என்னவெனில், பத்து நாட்களும் தமிழ், மலையாளம், உருது இவற்றுடன் ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் நடத்தப்பட்டமையால், முஸ்லீமல்லாத பல சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு உண்மையான ஏகத்துவத்தை விளங்கிச் சென்றனர்.

யதார்த்தம் இவ்வாறு இருக்கையில், ஏதோ இவர் வல்லத்தில் ஏற்றி வைக்கப்போகும் ஜோதி தான் உலகெங்கும் ஒளிபரப்பப் போவதைப் போன்றதொரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். உண்மையில் சென்னையில் நடைபெற்ற பத்து நாள் பீஸ் மீட்டிங்கில் தனது அடிப்;பொடிகள் எவரும் கலந்து கொள்ளக்கூடாதென தடை விதித்தவர், ஏகத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதை தடுத்து ஜும்ஆ உரையாற்றியவர், தன்னிடம் சம்பளம் வாங்கும் மவ்லவிகள் மூலமாக ஜும்ஆ உரையாற்ற வைத்தவர், இத்தனை தகுதிகளையும் தனிச்சிறப்புகளையும் பெற்றவர் தான், 'ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காகத் தான் இந்த தவ்ஹீத் மாநாடு' என்று அழைப்பு விடுத்துள்ளார்.

80 களில் இவரிடம் காணப்பட்ட தவ்ஹீத் கொள்கை உறுதி இன்று இல்லை என்பதை உண்மையான தவ்ஹீத்வாதிகள் அறிவர். அதற்கான சமீபத்திய சான்று தான் பாக்கர் - பஸ் - நந்தினி – பிஜேவின் ஆடியோ – பாக்கர் நீக்கம் - பாக்கரின் துபாய் பயணம் - மிரட்டல் - மீண்டும் பாக்கருக்கு முன்னிலும் கூடுதல் அதிகாரத்துடனான பதவி. இத்தனைக்குப் பிறகும் இவரிடமிருந்து ஏகத்துவத்தை விளங்க முயற்சிப்பவர் ஒன்று மார்க்கமறியாதவராக இருக்க வேண்டும் அல்லது இவர் என்ன செய்தாலும் கண்மூடி பின்பற்றும் தக்லீத்வாதியாக இருக்க வேண்டும். ஆக மொத்தம் ஸஹாபாக்கள் துவங்கி அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும் ஏசிய இவரை, சுயநலத்திற்காக தவ்ஹீத் கொள்கையில் தடுமாறும் இவரை, உண்மையான தவ்ஹீத்வாதிகள் ஒருக்காலும் பின்பற்ற மாட்டார்கள்.

இந்த அச்சம் அவருள்ளும் எழுந்துள்ளதன் விளைவு தான் கவர்ச்சி அம்சங்களாக பல விஷயத்தை இந்த மாநாட்டில் இணைத்துள்ளார் போலும்.

இந்த மாநாடு சுயம்வர மாநாடாகவும் நடைபெற உள்ளதாம். ஆம். ஆணும் பெண்ணும் கலந்து செல்லும் தர்ஹா, கூடு, உரூஸ் போல இதுவும் ஒரு திருவிழா கோலம் பூண இருக்கிறது. இது போல பல நவீனத்துவங்களை (பித்அத்களை) நடத்தியாவது கூட்டம் சேர்த்தாக வேண்டுமென்ற நிர்பந்தம் காரணமாகத் தான் இத்தனை முஸ்தீபுகளும். இதற்கெல்லாம் மேலாக உச்சகட்டமாக வேறொரு முயற்சியும் நடந்து வருவதாக அறிகிறோம். இது இஸ்லாமிய சமூகத்திற்குள் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும். அதாவது மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வைப் போன்ற அமைப்பை இந்த மாநாட்டுத் திடலிலும் அமைக்க இருப்பதாக அறிகிறோம். இதே போன்றதொரு முயற்சியை 2000 ஆம் ஆண்டு மதுரையில் ஏற்பாடு செய்த ஏகத்துவ எழுச்சி மாநாட்டிலும் செய்திருந்தார். அன்றய தேதியில் பலரின் ஆட்சேபனைகளுக்கு இந்த காரியம் உள்ளானது. என்றாலும் 2000 ல் இருந்தவர்கள் இன்று அவருடன் இல்லையென்ற காரணத்தினாலும் இது போன்ற ஏதாவது ஒரு செட்டைக் காட்டியாவது மக்களை அங்கு இழுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினாலும் இதை செய்திருக்கிறார்.

உலகிலேயே முதல் வணக்கத்தலமான கஃபாவை காட்சிப் பொருளாக்குவதை முஸ்லிம்கள் எவரும் விரும்ப மாட்டார். குறிப்பாக, உண்மை தவ்ஹீத்வாதிகள் அதனை எதிர்க்கவே செய்வார்கள். ஒரு சில மாதங்களுக்கு முன் உலகின் முன்னணி நிருவனமான ஆப்பிள் கம்பியூட்டர் கம்பெனி அமெரிக்காவில் பளிங்கு கற்களால் கஃபாவை உருவாக்க முனைந்த போது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்ததே இதற்கு சாட்சி. வரலாற்றிலும் கூட அப்ரஹா மன்னன் அபாபீல் பறவைக் கூட்டத்தால் அழிக்கப்படுவதற்கு முன்னால் ஏமன் நாட்டில் கஃபாவைப் போன்றதொன்றை அவன் உருவாக்கியது வரலாற்றுப் பதிவு. என்றாலும் அதனை அப்போது இருந்த முஸ்லிம்களும் எதிர்த்தார்கள் என்பதும் வரலாறு.

ஆக எப்பாடு பட்டாவது இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டாவது தன் ரசிகர்களுக்கும் ஏதமறியாத அப்பாவி முஸ்லிம்களுக்கும் படம் காட்டி அதன் மூலம் பணமும் பலத்தையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறார் போலும். இதற்காக எவ்வளவு செலவழித்தாலும் அவரைப் பொறுத்த அளவில் அவை அனைத்துமே இவ்வுலக வியாபாரத்தில் இடப்படும் முதலீடு தான்.

இதைப் போலவே 2005 ஜனவரியில் கூட்டிய (கூடிய அல்ல) கூட்டத்தைக் காட்டி போயஸ் தோட்டத்து பொன் மகள் (அன்றய அரசி)யிடம் சன்மானம் பெற்றுக் கொண்டார். தேர்தல் நேரத்தில் தளபதியாகவும் செயல்பட்டார். அதனால் தான் இப்பொழுது என்ன செலவானாலும் அதனை மீண்டும் என்கேஷ் பண்ணிக் கொள்ளலாம் என்று தாரளமாக செலவு செய்கிறார். இதைச் சொல்லியே ஒரு பெருந்தொகை வசூலிக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

எல்லாம் முடிந்த பின் தப்பித் தவறி யாரேனும் கணக்கு கேட்டாலோ, ஃபளுலுல் இலாஹிக்கு நேர்ந்த கதி தான் என்பதை உணர்ந்த இந்நாள் தளபதிகள் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளனர்.

ஏற்கனவே மக்களை விலை பேசி சேர்த்த பணத்தை செழிக்க வைப்பதற்காக சிலு சிலு சிங்கப்பூரில் வியாபார முதலீடு செய்து தனது பினாமியை – அற்புத மனிதன் அலாவுதீனை (40 பேர் ஏறி உயிர் நிலையில் உதைத்த பின்னும் உயிர் பிழைப்பவர் அற்புத மனிதராகத் தானே இருக்க முடியும்) நாடு கடத்தியாகி விட்டது.

இந்த மாநாட்டை யாரிடம் காட்டி சமுதாயத்தை விலை பேச காத்திருக்கிறாரோ?! இதன் மூலம் பெறும் கையூட்டைக் கொண்டு பினாமியாக பிஸினஸ் நடத்தும் பாக்கியம் எந்த தளபதிக்கு கிடைக்கப் போகிறதோ.

பொறுத்திருந்து பார்ப்போம்.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 15.04.2008

1 comment:

இறை அடியான் said...

Poramai in Neelam Katturai il Therekirathu