Wednesday, December 26, 2007

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய அதிகாரம்!

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய அதிகாரம்!
வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

தமிழ்நாட்டில் ஏராளமான அளவில் வக்ஃபு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்களிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிட பல தடைக்கற்கள் இருந்தன. குறிப்பாக இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வக்ஃபு வாரியம் புகார் அளிக்க வேண்டும். தொடர்ந்து அவர்களை வலியுறுத்த வேண்டும் என எண்ணற்ற தடைகளைத் தாண்டிய பிறகே வக்ஃபு சொத்துக்களை மீட்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் தேவையற்ற கால தாமதம் நிலவி வந்தது. பல நேரங்களில் அதிகாரிகளும் ஒத்துழைக்க மறுத்த சூழ்நிலைகளும் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள வக்ஃபு நிலங்களை மீட்க பதவியேற்ற நாள்முதல் அயராது செயலாற்றி வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் 'மேற்கண்ட பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழ்நாடு வக்ஃபு வாரியச் செயலாளருக்கு அதிகாரம் பெறுவதே' என்ற முடிவுக்கு வந்தார். இதைத் தொடர்ந்து வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலரை உடைமை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என 2.4.7.2007 அன்று நடைபெற்ற வக்ஃபு வாரியக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்த நிகழ்வுகளின்போது வலியுறுத்தியும் வந்தார்.

இதனையடுத்து தமிழக முதல்வர், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட ஆவன செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:

''தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சட்டம்
1975 பிரிவு
2 (ங்)ன்படி 'பொதுச் சொத்து' என்பது அரசுக்குச் சொந்தமான அல்லது (அரசால்) குத்தகைக்கு எடுக்கப்பட்ட அல்லது (அரசால்) உடைமை கைப்பற்றப்பட்ட அல்லது அரசின் சார்பான சொத்து ஆகும். இச்சட்டத்தின் உட்பிரிவு (2)ன்படி எந்தவொரு சட்டத்தின்படியும் உருவாக் கப்பட்ட வாரியம் அல்லது உள்ளாட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அல்லது உரிமை அளிக்கப்பட்ட சொத்துக்களும் பொதுச் சொத்து என்பதில் உள்ளடங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் ஏராளமானோர் முறைகேடான வகையில் வக்ஃபு நிறுவனங்களுக்கு எவ்வித வாடகையும் செலுத்தாமல் குடியிருந்து வருவதைக் கண்டறிந்த தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் ஜனாப் செ. ஹைதர் அலி, வக்ஃபுச் சொத்துக்களில் உள்ள முறைகேடான குடியிருப்புக்களை அகற்றிட தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலருக்கும் இச்சட்டத்தின்படியான அதிகாரத்தை வழங்கி தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சட்டம்
1975 பிரிவு
3ன்படி தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரை உடைமை அதிகாரி
(Estate Officer) ஆக நியமனம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வேண்டும் என தனது
12.6.2007 நாளிட்ட கடிதத்தில் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார். வாரியத் தலைவரின் கோரிக்கையைத் தமிழ்நாடு வக்ஃபு வாரியமும் தனது
24.7.2007 நாளிட்ட தீர்மானத்தில் வலியுறுத்தியது.

வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, அரசாணை (நிலை) எண்.
107 பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள்
20.12.2007ன்படி தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரை தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் அதிகாரி ஆக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் முறைகேடாக குடியிருப்போரைச் சட்டத்தின் பிரிவு 4ன்படி நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்யவும், பிரிவு
5ன்படி சொத்திலிருந்து வெளியேற்றவும் உடைமை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரிவு
8 ன்படி எந்தவொரு நபருக்கும் அழைப்பாணை அனுப்பவும், விசாரணையில் ஆஜராவதை உறுதி செய்யவும், ஆவணங்களைக் கண்டு பிடித்துத் தாக்கல் செய்யவும் குறிப்பிட்ட இதர விஷயங்களில் இச்சட்டத்தின் நோக்கத்திற்காக உடைமை அதிகாரிக்கு
1908ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் வழக்கை விசாரிக்கும்போது உரிமையியல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் எவ்வித அனுமதியும் இல்லாமல், வாடகை எதுவும் கொடுக்காமல் அனுபவித்து வரும் முறைகேடான குடியிருப்பாளர்களை அகற்றும் வகையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது''.

No comments: