Tuesday, October 23, 2007

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் கேள்விக்குறியே - கலைஞர்

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் முழுமையான கட்டத்தை தாண்டிவிடவில்லை :சொல்கிறார் முதல்வர்




சென்னை : "சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சட்டம் இன்னும் முழுமையான கட்டத்தை தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்துவிட முடியாது' என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியனார்.

முதல்வர் பேசியதாவது: நெடுநாள் எதிர்பார்ப்பில் இருந்து பெரிய பரிசை பெற்ற மகிழ்ச்சியில் கட்சித் தலைவர்கள் இங்கு பேசினர். நன்றியை எதிர்பார்த்து இந்த நிலையை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிக்கு ஜனநாயக ஒப்புதலை தற்போது பெற்றுள்ளோம். எதிர்ப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடைபெறவில்லை என்பது வரலாறு. 50, 60 ஆண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது இந்த சமூக நீதிக்கான வித்து ஊன்றப்பட்டது. புறக்கணிக்கப்பட்ட மக்கள், படிப்பறிவு தேவையில்லை என்று மிரட்டப்பட்ட மக்கள் சார்பாக எழுந்த குரல் வலுவாகி, நடேசனார், நாயர் போன்றவர்களின் போர் முழக்கங்கள் காரணமாக எழுந்த உணர்ச்சிகளின் விளைவு தான் தற்போது சட்டசபையில் பூத்துக் குலுங்கி பூரிப்பு கொள்ளச் செய்துள்ளது. இடையில் எத்தனையோ சோதனைகள், வேதனைகளை சந்திக்க நேரிட்டது. இன்னும் அந்த கட்டத்தில் இருந்து முழுமையாக தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை நமது உரிமை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்து விட முடியாது. எனவே, இந்த சட்டம் இன்னும் முழுமை பெற்று விடவில்லை. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறி விடவில்லை. இன்னும் நிறைவேற்ற முன்வரவில்லை என்ற சலிப்புகள் நாட்டில் உள்ளன. நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதற்காக துணிந்து இந்த அரசு, சட்டமசோதாவை தற்போது கொண்டு வந்துள்ளது.

சட்டசபையின் வரலாற்றில் இது ஒரு பொன் நாள்: சமூக நீதிக்கான வரலாற்றில் புரட்சிகரமான நாள். இந்த சமுதாயம் எழுந்து நடமாட முடியுமா?, அப்படியே முயற்சித்து அடியெடுத்து வைத்தாலும் ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து இந்த சமூகம் அடிமைப்பட்டு கிடந்தது. அவர்களது உணர்வுகளை தட்டி எழுப்பிய தலைவர்கள் தற்போது கல்லறைகளில் உள்ளனர். அந்த தலைவர்களின் கல்லறை உள்ள திக்கு நோக்கி நன்றி தெரிவிப்போம். இந்த பயனை அடைய நீந்தி வந்த காட்டாறுகள் எவ்வளவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். விளைந்த நெல்லை களத்தில் காண உழுதவனுக்கு உழைத்தவனுக்கு ஆசை இருக்கும். அவர்களது பிரதிநிதிகளாக நாம் இருப்பதால் தான் கஷ்டம் தெரிகிறது. இதற்காக சிந்திய வியர்வை, கொட்டிய ரத்தம் சாதாரணமானதல்ல. இந்த வெற்றியை நீதிமன்றங்கள், வீதிமன்றங்களில் எடுத்துச் சொன்னதால் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வருங்காலத்தில் வருவோர் எதுவும் செய்வதற்கு விட்டு வைக்காமல் நானே செய்து வருவதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இன்னும் செய்வதற்கு ஏராளமாக உள்ளது. சிலையை செதுக்கி, தயாரித்து, அதை பீடத்தில் வைத்து விட்டாலும் சிற்பி கடைசியாக அந்த சிலையின் கண்ணை திறப்பது தான் முக்கியமானது. இன்னும் தமிழகத்தில் அந்த கண் திறக்கப்படவில்லை. சிலை முழுமை பெற நாம் அனைவரும் பாடுபட்டு உழைப்போம். சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட சபதம் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

நன்றிங்க.

2 comments:

கடல் கடந்த தமுமுக said...

குழப்ப வேண்டாம் தினமலரைபடித்து குழப்ப வேண்டாம் முதல்வர் பொதுவான இடஒதுக்கீடு குறித்தும் 69 சத இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தடை குறித்தும் பேசியதை பார்ப்பன தினமலர் திரித்து இரட்டிப்பு செய்வதை நாமும் வழிமொழியலாமா முதல்வர் இப்படித்தான் பேசியுள்ளார்
ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பிலே இருந்த அந்தக் காலக்கட்டத்தில் இந்த சமூக நீதிக்கான வித்து ஊன்றப்பட்டது என்பதும் அதனுடைய விளைவாக சமுதாயத்திலே ஏற்பட்ட மறுமலர்ச்சி புறக்கணிக்கப்பட்ட மக்கள், மூலையிலே தள்ளப்பட்ட மக்கள், இவர்கள் சார்பாக எழுந்த குரல், அந்தக் குரல் வலுவாகி அதன் காரணமாக நடேசனார், நாயர், தியாகராயர் போன்றவர்கள் புரிந்த போர் முழக்கத்தின் காரணமாக எழுந்த அந்த உணர்ச்சியினுடைய விளைவு தான் இன்றைக்கு இந்த அவையிலே பூத்துக் குலுங்கி நம்மையெல்லாம் பூரிப்பு கொள்ள செய்திருக்கின்ற ஒன்றாகும்.
முழுமையாக தாண்டவில்லை
ஆனால் இதற்கு இடைக்காலத்திலே எத்தனை சோதனைகள், எத்தனை வேதனைகளை நாம் சந்திக்க நேரிட்டது என்பதை விரிவாக விளக்க தேவையில்லை. இன்னமும் அந்தக் கட்டத்திலே இருந்து நாம் முழுமையாக தாண்டிவிடவில்லை. இன்னமும் உச்சநீதிமன்றம் வரையில் நம்முடைய உரிமைகள் என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக இருப்பதை நாம் மறந்துவிடவில்லை.
இன்னமும் சில தேவைகள், கோரிக்கைகள் அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கங்கள், இன்னமும் நிறைவேற்ற முன்வரவில்லையே என்ற சலிப்புகள் இவைகளெல்லாம் நாட்டில், சமுதாயத்தில் இருக்கின்றன.

Unknown said...

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 70 பேருக்கு தனி நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவிக்கவுள்ளது.


கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ. பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி, தாஜூதின், முகம்மது அலிகான் குட்டி, முகமது பஷீர், உசீர், பாபு, ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்

1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாஷா, அவரது மகன் சித்திக் அலி, தம்பி நவாப் கான், பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

கோவை சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இறுதியில் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

158 குற்றவாளிகளில் சாதாரண குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 76 பேருக்கு தண்டனை விவரம் வெளியிடப்பட்டுவிட்டது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இந் நிலையில் கொலை, சதி, ஆயுதக் கடத்தல், ஆயுதம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பாஷா, நவாப்கான், அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக இவர்கள் அனைவரும் இன்று நீதிபதி உத்திராபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து அவர்களுக்கான தண்டனையை நீதிபதி அறிவித்தார்.

அப்போது அல்-உம்மா தலைவர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

அல்-உம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.

பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி, தாஜூதின், முகம்மது அலிகான் குட்டி, முகமது பஷீர், உசீர், பாபு, ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்

தண்டனை விவரம் வெளியிடப்படுவதையொட்டி கோவை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் விடிய விடிய தீவிர வாகனக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கோவை முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Thanks: //thatstamil.com