Sunday, June 11, 2006

இந்திய மக்கள் பேரவை (புதிய அமைப்பு)

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இந்திய மக்கள் பேரவை ஏன்? எதற்கு??
சிந்திக்க! தெளிவு பெற! செயல் பட!!

எந்த சமுதாயம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளவில்லையோ அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை (அல் குர் ஆன்)

முஸ்லிம்களின் இன்றைய பரிதாப நிலை

சுதந்திரம் பெற்று 60 ஆண்டை தொட இருக்கிறோம், சுக வாழ்வு பெற்றோமா? சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுகளில் முஸ்லிம்கள் மேல் நடத்தப்பட்ட கலவரங்கள் 15 ஆயிரம் (உயிர் உடமை இழப்புக்களை யூகித்துக் கொள்ளுங்கள்). கல்வி, வேலை வாய்ப்பு, இட இதுக்கீடு, பொருளாதார பின்னடைவு போன்றவற்றில் மிக மிக பின்தங்கிய சமூகம் இஸ்லாமிய சமூகம் என்று புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. எங்கே எப்பொழுது என்ன நடக்கும் யார் தலை போகும் உயிர் போகும் உடமை போகும் என்று சொல்ல முடியாத நிலை.

காலராவில் கூட தப்பிவிடுவான் போலிருக்கு
கலவரத்தில் தப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கடல் கடந்து தாய் தந்தை சொந்தம் பந்தம் துறந்து வேலை செய்யும் நம்மவர் தாயகம் சென்று திரும்பி வரும் போது
தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு சிறை சாலையில் அடைக்கப்படும் நிலை. மறுபுறம் முஸ்லிம் வியாபாரத் தலங்கள் திட்டமிட்டு சூரையாடப்படுகின்றன. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையோ வேலியே பயிரை மேயும் நிலை.


பல இனங்கள் ஜாதிகள் மதங்கள் மொழிகள் கலாட்சாரங்கள் பண்பாடுகள் கொண்ட பன்மை சமுதாய மக்களை நமக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காயும் அபாயகரமான நிலை தொடர்கிறது. சமீபத்தில் ஒரு ஜனாஸாவை (மய்யத்) பொதுபாதை வழியாக எடுத்துச் செல்ல தடை. நமக்கு எதிராக சூழ்ச்சிகளும், துரோகங்களும், வன்முறைகளும் தொடர்ந்த வண்ணமாய் இருக்கின்றன. வாய்மையே வெல்லும் என்பது அந்தக் காலம். அதர்மமே வெல்லும் என்பது இந்தக் காலம். பலம் உள்ளவன் பலம் இல்லாதவனை அசைக்கிறான். பலம் பலஹீனம் என்பதைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்களுக்கு மேல்
சட்டம் ஒன்று இருக்கிறது சட்டத்தின் முன் அனைவரும் சமம். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனால் அந்த சட்டத்தை காலில் போட்டு மிதித்து விட்டுத்தான் பாரத நாட்டின்
பண்பாட்டுச் சின்னம் பாபர் பள்ளி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. விழாமலே வாழ்ந்தோமா? என்பதில் பெருமையில்லை. வீழ்ந்த போது எழுந்தோமா? என்பதுதான்
கேள்வி. நம்மை நாம் காய்த்தல் உவத்தல் இன்றி நடுநிலை உணர்வோடு சீர்தூக்கி சிந்திக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.


இந்திய சமூக அமைப்புகளும், தலைவர்களும்

கடந்தகால கசப்பான அனுபவங்கள் நிகழ்வுகள் தோல்விகள் ஏமாற்றங்கள் சமூக கட்டமைப்புக்கான அஸ்திவாரங்கள் என்றான் ஒரு அறிஞன். ஆம். தோல்விகளே வெற்றிக்கான படிப்பினைகள். ஆனால் சோதனைகள் வேதனைகள் தோல்விகள் இவை முஸ்லிம் சமுதாயத்திற்கு நிரந்தர சொத்தாகி விட்டன. முட்டாள் கூட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறுகிறான். நாமோ அறிவாலிகள் என்று சொல்லிக் கொண்டு ஏமாறுவதையே ஏற்றம் என்று வாய்கிழிய பேசிக் கொண்டு நம்மையே ஏமாற்றிக்கொண்டு ஆம், நம் எதிர்கால சந்ததிகள் அடிமை வாழ்வு வாழ வழி வகை செய்து கொண்டு இருக்கிறோம்.


எத்தனை உள்ளாட்சித் தேர்தல்கள், எத்தனை சட்டசபைத் தேர்தல்கள், எத்தனை இடைத் தேர்தல்கள் எத்தனை பாராளுமன்றத் தேர்தல்கள்.
கோழிகளுக்கு கோதுமையைத் தூவினால் சண்டை வந்து விடுகிறது. தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்தால் நமக்குள் சண்டை வந்து விடுகிறது. நமக்கும் கோழிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. தன் பலத்தை உணராத காரணத்தால் அங்குசத்திற்கு அடங்கிப் போகும் யானையைப் போன்று நீ இருக்கிறாய் என்று வேதனையோடு சொன்ன ஷஹீது பழனி பாபாவின் கூற்றை மறந்து விட முடியாது..

வேதனையோடும், விரக்தியோடும் சொல்கிறோம், சமூகத்
தலைவர்கள் என்று சொல்வதை விட சமுதாய தலைவலிகள் என்று சொல்லலாம். சுய மரியாதை தன்மானம் விவேகம் தூரநோக்கு பார்வை தெளிவான திட்டம் தெளிவான நோக்கம் வியூகம் எதுவும் இல்லாமல் பிறரிடம் கையேந்தி நிற்பதையே தொழிலாகக் கொண்டு நோட்டுக்கும் ஓட்டுக்கும் ஒரு சீட்டுக்கும் - ஆம் நம் சமூகத்திற்கு துரோகம் இழைப்பதையே
வாடிக்கையாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

வீர ஆவேச வேங்கை போல் மேடைகளில் பேசுகிறார்கள். வினை முடிக்கும் செயல் திறன் இல்லாமல் பொறியில் மாட்டிய எலி போல் நிற்கிறார்கள். துரோகமும், நயவஞ்சகமும், நம்பிக்கை மோசடியும், பொறுப்பற்ற போக்கும் சமூக அக்கரை இன்மையும், ஒற்றுமையின்மையும், இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கடமை உணர்வும், மறுமை பயமும், நெருப்பில் நிற்கும் இன்றைய சமூக சூழலையும் வாய்மையுடன் ஒரு கனம் நினைத்துப் பார்த்து இருப்பார்களேயானால் என்றைக்கோ வெற்றி முகட்டை தொட்டு இருப்பார்கள். தகுதி இல்லாதவர்களை தலைமைப் பதவியில் அமர்த்தியதால் துரதிருஷ்டம் சோகங்களையே கணக்கு பார்க்கும் பரிதாபகரமான நிலை சமூகத்தில் தொடர்கிறது.


பிள்ளையை அடக்கம் செய்துவிட்டு திரும்பி வரும் தகப்பன் வழியில் நின்று திரும்பிப் பார்ப்பதைப் போன்று சமூகம் பார்க்கிறது. பன்மை சமுதாயத்தில் சிறு சிறு ஜாதி அமைப்புகள், சங்கங்கள், தங்கள் சுய நலத்திற்கு ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு வேறுபட்ட எல்லா சமூக ஜாதி இன மக்களையும் ஒன்றினைத்து தேசியம், திராவிடம், தெய்வீகம், பாட்டாளிகள், கூட்டாளிகள் என்றெல்லாம் பெயர் மாற்றி இந்தியாவை அசைக்கின்ற சக்திகளாக இருக்கின்றனர். அவர்கள் நினைத்தால் நாளையே அரசையே கவிழ்த்து விடுவார்கள் போலிருக்கிறது.

தீர்க்கமான தீர்வைத் தேடி

பெரிய மக்கள் சக்தியைக் கொண்ட நாம் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது. நம்மை மட்டுமே முன் நிறுத்தி பெயர் சூட்டி கட்சி நடத்துவதால் பிரிவினைவாதிகள் என்றும், தேச துரோகிகள், அந்த சமூகத்திற்கு மட்டும் உரிமை பெற உழைக்கும் சுயநலமிகள் என்றும் நம்மைப் பற்றி தவறாக பிரச்சாரம் செய்ய ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும். பிஜேபியைப் பாருங்கள் 2 சத வீதம் உள்ள சமூகம் மனுவைக் காட்டி மனித குலத்தை பிரித்த வர்க்கம் தீண்டாமை இந்து மத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்று சொல்லுகிறவர்கள் எல்லாத் தரப்பு மக்களின் நன்மையை நாடுபவர்களைப் போன்று தேசியமும், தெய்வீகமும் ஒன்று என்று இரட்டை நாக்கை சூழற்றிக் கொண்டு இந்திய அளவில் பொதுவான பெயரில் ஒரு பெரிய கட்சியை நடத்துகிறபோது நாமும் வஞ்சிக்கப்பட்ட எல்லாத் தரப்பு மக்களின் உண்மையான, நியாயமான உரிமைகளுக்காக மதிப்பு அளித்து பிறரிடம் கைநீட்டி ஒரு சீட்டும் இரண்டு சீட்டும் கெஞ்சி கேட்பதை விட நாம் ஏன் பிறருக்கு கொடுக்கும் நிலையில் வரக்கூடாது – சமூக நல்லிணக்க, மனித நேய உறவுகள் மலர்ந்திட, போலி தேசிய நீரோடை என ஏமாற்றும் எத்தர்களின் முகத்திரை கிழித்திட நாம் அனைவரும் இந்தியர், வண்ணங்கள் வேறுபட்டாலும் எண்ணங்கள் ஒன்று என உணர்த்திட தமிழக அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்திட சகோதரர்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அரசியல் ரீதியாக வலிவும் பொலிவும் பெற இந்திய மக்கள் பேரவை தொடங்கியுள்ளோம். காலத்தின் கட்டாயம், சமூகத்தின் இன்றியமையாத தேவை, எதிர்கால சந்ததியினரின் வழித்தடம் இந்திய மக்கள் பேரவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஐயங்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள், விளக்கங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்வீர் ::

  1. ipftamil@hotmail.com
  2. ipftamil@rediff.com
  3. ipftamil@yahoo.com
இவண்
அன்புடன்
இந்திய மக்கள் பேரவை,

5 comments:

Unknown said...

இது வரை வந்த தலைவர்கள் எல்லாம் வரும் போது அழகாய்த்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்கமும் வரும்போது சமூக நன்மைக்குப் போராடவென்றே வருகிறது. வந்தபின் மக்கள் சக்தி அவர்கள் பின்னே அணிவகுக்கத் தொடங்கிய பின்னர்தான் வெற்று வேட்டுகள், சுய நலமிகள், யாருக்கோ கொடிபிடிக்கக் கூடியவர்கள் என்பது புரிந்து கைசேதப்பட வேண்டி இருக்கிறது.
இதற்கு மாற்றமாக தெளிவான மாற்று கருத்துக்கள் (தலைவர் மற்றும் பொறுப்பாளர்களில் தரமில்லையென்றால் தொண்டர்களே அவர்களை பொறுப்பிலிருந்து அப்புறப் படுத்த ஏதுவான தெளிவான திட்டம்)இல்லாத எந்தவொரு புது இயக்கமும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று என்றுதான் ஆகும்.

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


சரியான சமயத்தில் மிகச்சரியான முயற்ச்சி. இம்மடல் உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடல்ல, உள்ளக்குமுறல்களின் வெளிப்பாடு என்பதை என்னால் உணர முடிகிறது. கடினமான முயற்ச்சிதான் முயன்றுதான் பார்ப்போமே? உங்கள் முயற்ச்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

Comments Received By Mail from projects@umgco.com

Anonymous said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள் ஆனால் இதன் செயல்பாடுகள் தமுமுக போன்றோ அல்லது முஸ்லிம் லீக் போன்றோ பிற்காலத்தில் அமையாதிருக்கவேன்டும்.

இன்றைய நிலையில் தெளிவான ஒரு மாற்று இயக்கம் நமக்கு தேவைதான்.

Anonymous said...

இன்றைய சமுதாயக்காவலர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொன்டவர்களும், கழகங்களும், லீக்குகளும், ஜமாத்துகளும் தம்மையும் தனது உரிமைகளையும் காத்து இழந்த உரிமைகளை பெற்றுத்தரும் என்று பல ஆண்டுகளாய் காத்திருந்து ஏமாந்த மக்கள் மணதில் கனன்று வந்த உந்துதலின் விளைவே இது என்று அறிகையில் எம்மையும் அறியாமல் சந்தோஷம்.

இது இன்றைய இயக்கவாதிகளுக்கு கிடைத்த மரண அடி !! இனியும் இம்மக்களை நாம் ஏமாற்ற முடியாது இவர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே எழுத புறப்பட்டு விட்டார்கள் என்ற அச்சம் இனி இயக்கவாதிகளை ஆட்டிப்படைக்கும்.

புதையுண்ட கண்ணி வெடியாய்க் கனன்று
தன்னை இடறும் ஒரே ஒரு சொல்லுக்காய் காத்திருக்கும் மக்களுக்கு உங்களின் இந்த முடிவு மகிழ்ச்சியைக்கொடுக்கும் இனி பிரவாகமென வெடித்து புறப்படுவார்கள்.

வாழ்த்துக்கள்.

ஆத்தூர்வாசி said...

குஜராத் வீடியோ --


I'm sorry to post this at an inappropriate place, but still its worth it, watch this google video (documentry)

http://video.google.com/videoplay?docid=4452580708715802828&q=final+solution

I hope some of the moderators will make a thread to display this video.

தனியாக TOPIC உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்